
அரச செலவினங்களைக் கட்டுப்படுத்த நிதி அமைச்சின் செயலாளர் விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அனைத்து அமைச்சுக்கள், இராஜாங்க அமைச்சுக்கள், மாகாண சபைகளின் பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் பிரதானிகளுக்கு இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
நெருக்கடியான சூழலில், அரசின் வருவாயை அதிகரிக்க காலம் எடுக்கும் என்பதால், அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பயன்படும் வகையில், அரச செலவினங்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதன்படி, எரிபொருள் மற்றும் தகவல் தொடர்பு கொடுப்பனவுகளை செலுத்துவதை கட்டுப்படுத்தவும், நீர் மற்றும் மின்சாரத்திற்கான செலவினங்களை கட்டுப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கட்டடங்களை நிர்மாணிப்பதும் வாடகைக்கு வழங்குவதும் நிறுத்தப்பட்டு, உள்ளூர் நிதி மூலம் வெளிநாட்டு ஆய்வுப் பயணங்களை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உள்ளூர் நிதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, கொள்முதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள மற்றும் ஆரம்பிக்கப்படவுள்ள அனைத்து திட்டங்களும் தற்காலிகமாக இடைநிறுத்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதுவரை நியமிக்கப்படாத பதவிகளுக்கான ஆட்சேர்ப்புகள் பிற்போடப்பட்டுள்ளதுடன், பணிக்குழாமினருக்கு வழங்கப்படும் கடன் வசதிகள் இந்த ஆண்டு இறுதி வரை இடைநிறுத்தப்படும்.
இந்த சுற்றறிக்கையின்படி, அத்தியாவசிய பயனாளிகளுக்கு மாத்திரம் நலன்புரி மற்றும் நிவாரணம் என்பன மட்டுப்படுத்தப்படுகிறது.
உண்மையாக பணியில் ஈடுபடுகின்றமை மற்றும் வருகைப்பதிவு சரிபார்க்கப்படாமல் வழங்கப்படும் அனைத்து மேலதிக நேர கொடுப்பனவுகளையும் இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

