தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு இதுதான்-அநுர வலியுறுத்து

தற்போதைய பாராளுமன்றத்திற்குள் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு பொதுத் தேர்தலுக்கு செல்வதே தற்போதுள்ள நெருக்கடியில் இருந்து மீள ஒரே வழி என தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் பதவி விலக வேண்டுமென பெரும்பான்மையான மக்கள் கோரிக்கை விடுத்து இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட வேண்டுமெனவும் கூறினார்.

ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடம் என குறிப்பிட்ட காலத்திற்கு இடைக்கால அரசாங்கம் அமைத்து அதன் பின்னர் பொதுத் தேர்தலை நடத்தி மக்கள் விருப்பமான புதிய அரசாங்கத்தை தெரிவு செய்ய வேண்டும் என்றார்.

“நிதிப் பிரச்சினையால் இந்தத் தருணத்தில் தேர்தலை நடத்த முடியாது என்று சிலர் கூறுகின்றனர். இது காலத்தைக் கொல்லும் நொண்டிச் சாக்கு. தேர்தலுக்கு 13 மில்லியன் ரூபாய்தான் செலவாகும். தேவையில்லாத விஷயங்களுக்கு அதிகப் பணம் செலவழிக்கிறோம். இந்த நெருக்கடிக்கு தீர்வு காண்பது விலை உயர்ந்ததாக இருக்காது,” என்றார்.

தற்போதைய ஜனாதிபதி பதவியில் இருக்கும் போது இடைக்கால அரசாங்கம் போன்ற எந்தவொரு தீர்வையும் முன்வைப்பதற்கு ஜே.வி.பி உடன்படாது என அவர் தெரிவித்துள்ளார்.

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்பதே எங்களின் முன்மொழிவு. பின்னர், ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு இடைக்கால அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும், பின்னர் மக்கள் விருப்பமான புதிய அரசாங்கத்தை உருவாக்க பொதுத் தேர்தலுக்கு செல்ல வேண்டும். இந்த பாராளுமன்றத்தின் கீழ் முன்மொழியப்படும் எந்தவொரு தீர்வும் இந்த நெருக்கடியை தீர்க்காது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *