
சாய்ந்ததமருது, ஏப் 27
அம்பாறை – சாய்ந்தமருது பகுதியில் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் திகதி இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உடற்பாகங்கள் இன்றைய தினம் மீண்டும் தோண்டி எடுக்கப்படவுள்ளன.
கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தில் குண்டுத் தாக்குதல் நடத்தியவரான மொஹமட் ஹஸ்துன் என்பவரின் மனைவியான சாரா ஜெஸ்மின் என்ற புலஸ்தினி மகேந்திரனின் மரபணுவை அடையாளம் காண்பதற்காக குறித்த உடற்பாகங்கள் மீள தோண்டி எடுக்கப்படவுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
அம்பாறை நீதவானின் கண்காணிப்பில் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி, அரச இரசாயன பகுப்பாய்வாளர் மற்றும் விசாரணை அதிகாரிகளும் இதன்போது பிரசன்னமாகவுள்ளனர்.