
அரசாங்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து அனைத்து தொழிற்சங்கங்களாலும் நாளை வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என்று தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தேசிய அமைப்பாளர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அரசு, அரை அரசு, தோட்ட மற்றும் தனியார் துறைகள் அனைத்தும் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.
நாட்டு மக்களின் குரலுக்கு செவிசாய்க்காமல் தன்னிச்சையான பயணத்தை மேற்கொள்ள அரசாங்கம் தயாராகி வருகிறது. எனவே இந்த நாட்டில் உழைக்கும் மக்களாகிய நாங்கள் நாளை வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.
காலிமுகத்திடலில் போராடும் இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்திற்காக போராடுகிறார்கள். ஆட்சியாளர்களை வீட்டுக்குப் போகச் சொல்கிறார்கள். இந்த நிலையில் நாட்டிலுள்ள அனைத்து உழைக்கும் வர்க்கத்தினரும் இணைந்து நாளை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். வேலைநிறுத்தத்தை அடுத்து வரும் மே மாதம் 6ஆம் திகதி கர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.´
ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் நாளை வேலைநிறுத்தப் போராட்டம் மற்றும் கூட்டு கர்த்தாலில் ஈடுபடுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது.