
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்ற அரசியலமைப்பு திருத்தம் 19 இல் இருந்து உறுப்புரை “33அ” அதாவது ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்பு கூற வேண்டும் என்ற உறுப்புரை அரசியல் யாப்பு 20வது திருத்தத்தில் முற்றாக நீக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் எமது நாட்டு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு அப்பால் இருந்து நாட்டை ஆளும் ஒரு தனி நபரே! இந்த ஜனாதிபதி முறைமை. இது தேவையா இந்த நாட்டிற்கு? என தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் தலைவர் முஸம்மில் முகைதீன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று (27) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
இந்த நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை மாற்றி பிரதமர் அதிகாரம் கொண்டு வருவோம் என ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் நாடு முழங்க பிரச்சாரம் செய்கின்றனர்.
ஆனாலும் தேர்தல் முடிந்து வெற்றி பெற்றவர் அந்த ஆசனத்தை அடைந்ததும் அதை மறந்து விடுகின்றார்.
இந்த 20வது திருத்தத்தின் மூலம் பாராளுமன்றத்திற்கு சம்பந்தமே இல்லாத ஜனாதிபதியே நாட்டை நடத்தும் அத்தனை உயர் அந்தஸ்துள்ள அதிகாரிகளை நியமிக்கின்றார்.
இந்த விடயத்தில் உயர் நீதி அரசர்கள், நீதி அரசர்கள், நீதிபதிகள், முப்படை தளபதி, பொலிஸ் மா அதிபர் போன்றவர்களை இந்த ஜனாதிபதி தனது சுயவிருப்பத்திலேயே நியமிக்கிறார்.
இது ஒரு முழுமையான ஜனநாயக மீறல் என்றாலும் நம் நாட்டு மக்களே இந்த மீறலுக்கு வாக்குகள் மூலம் அனுமதி வழங்குகின்றோம்- என்றார்.