ரம்புக்கனை சம்பவம்: சர்ச்சைக்குள்ளானது விசாரணை

ரம்புக்கனை,ஏப் 27

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட சகல பொலிஸ் உத்தியோகத்தர்களையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கேகாலை நீதவான் வாசன நவரத்ன பொலிஸ்துறைமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையின் பிரகாரம் 42 வயதுடைய நபரின் மரணம் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளானதால் ஏற்பட்டமை தெரியவந்துள்ளதாக நீதவான் தெரிவித்தார்.

குறித்த வழக்கு கடந்த 22ஆம் திகதி கேகாலை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​கலவரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் கேகாலை பிரதேசத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் கே.பி.கீர்த்திரத்ன துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், நிலைமையைக் கட்டுப்படுத்த காவல்துறை கலகத் தடுப்புப் பிரிவினர் நான்கு T-56 துப்பாக்கிகள் மற்றும் 35 தோட்டாக்களைப் பயன்படுத்தியதாகவும் தெரியவந்துள்ளது.

கடந்த 22 ஆம் திகதி நீதிமன்றத்தில் சாட்சியமளித்த கேகாலை பிரிவுக்கு பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் கீர்த்திரத்ன, நிலைமையைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதாகவும் ஆனால் இறுதியில் அது தோல்வியடைந்ததாகவும், பல தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டதாகவும்  கூறினார்.

நல்லெண்ண அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கேகாலை நீதவான் முன்னிலையில் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் புதன்கிழமை நான்காவது தடவையாக வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டவர்கள் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்திய அனைத்து காவல்துறையினரையும் உடனடியாக கைது செய்யுமாறு கேகாலை நீதவான் வாசன நவரத்ன உத்தரவிட்டார்.

சந்தேகநபர்கள் வெளிநாடு செல்லக் கூடும் என்பதால் அவர்கள் வெளிநாடு செல்வதை தடை செய்யுமாறும் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி சந்தேகநபர்கள் வெளிநாடு செல்வதை தடுக்கும் உத்தரவை நீதவான் பிறப்பித்துள்ளார்.

ரம்புக்கனை சம்பவத்துடன் தொடர்புடைய தாங்கி ஊர்தி மீரிகம பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும், எரிபொருள் வரக்காபொல பிரதேசத்தில் விடப்பட்டுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

இதற்குப் பதிலளித்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்டத்தரணிகள், சான்று பொருளான எரிபொருள் தாங்கியிலிருந்து இவ்வாறான எரிபொருளை விடுவிப்பதற்கு உத்தரவிட்ட அதிகாரி யார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும், கேகாலை காவல்நிலைய வளாகத்தில் தாங்கியின் முன்பகுதி மாத்திரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த இடத்தில் எரிபொருள் தாங்கி இல்லாதமை தொடர்பில் இன்று நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அப்போது அந்த எரிபொருள் தாங்கி எங்கே என்று காவல்துறையினரிடம் நீதிவான் கேள்வி எழுப்பினார்.

எரிபொருள் தாங்கி இல்லாமை மற்றும் காவல்துறையினர் முன்னர் வழங்கிய தகவல்கள் சந்தேகத்திற்குரியவை எனவும் நீதிவான் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் வழக்கை எதிர்வரும்  மே 2 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து நீதிவான் உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *