
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது அமர்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று உரையாற்றவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது அமர்வு அமெரிக்காவின் நியுயோர்க் நகரில் நேற்று ஆரம்பமானது
அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் தலைமையில் ஆரம்பமாகியுள்ள இந்த கூட்டத்தொடரில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பங்கேற்றுள்ளார்.
நேற்றைய முதல்நாள் ஆரம்பநிகழ்வில் பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் பொல்சனாரோ மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் ஆகியோர் உரையாற்றியிருந்தனர்.
இந்த நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அமர்வில் உரையாற்றவுள்ளார்.
இலங்கை நேரப்படி இன்று இரவு 8.30 முதல் 10 .30 வரை இந்த மாநாட்டில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் ஜனாதிபதி உரையாற்றும் முதல் சந்தர்ப்பம் இது என்பதுடன் இலங்கைக்கு வெளியில் சர்வதேச மாநாட்டில் ஜனாதிபதி பங்கேற்கும் முதலாவது சந்தர்ப்பமாகவும் அமைந்துள்ளது.
இதேவேளை “நம்பிக்கையின் மூலம் நெகிழ்ச்சியை உருவாக்குதல், கொரோனா தொற்றை ஒடுக்குவதன் மூலம் உலக ஸ்திரத்தன்மையை மீண்டும் உருவாக்குதல், கிரகத்தின் தேவைகளுக்கு பதிலளித்தல், மனித உரிமைகளை மதித்தல் மற்றும் ஐக்கிய நாடுகளின் சகவாழ்வை புதுப்பித்தல்” ஆகியவற்றில் கவனம் செலுத்துவது கூட்டத்தொடரின் நோக்கமாகவுள்ளது.
ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது பல்வேறு நாடுகளின் அரச தலைவர்களை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்
இந்த நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் பீரிஸ், ஜனாதிபதியின் பிரதான ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் வெளிவிவகார செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.