
இன்றைய தினம் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான தொடருந்துகளே சேவையில் ஈடுபடுமென தொடருந்து சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே, பயணிகள் மாற்று போக்குவரத்து வழிகளை நாடுமாறு அத்திணைக்களம் கோரியுள்ளது.
இன்றைய தினம் முன்னெடுக்கப்படும் நாடுதழுவிய தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு 1,000க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
எனினும், பேருந்து சேவைகளை வழமைபோல முன்னெடுக்க இபோச தொழிற்சங்கத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளதாக நேற்றைய தினம் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் தெரிவித்திருந்தார்.
இதேவேளை, தனியார் பேருந்து உரிமையாளர்கள் இன்றைய போராட்டத்துக்கு ஆதரவு வழங்குவது குறித்து தனித்தனியே தீர்மானிக்க முடியும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
எவ்வாறாயினும் சங்கம் என்ற அடிப்படையில் அடுத்த வாரம் சேவை புறக்கணிப்பை மேற்கொள்ள தீர்மானித்துள்ளமையினால் இன்றைய தினம் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்துக்கு ஆதரவு வழங்க முடியாது என அவர் குறிப்பிட்டார்.