
அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைக்க, நிறைவேற்று ஜனாதிபதி என்ற வகையில், கொள்கை ரீதியில் தாம் இணங்குவதாக அரசாங்கத்தில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் ஜனாதிபதி எழுத்துமூலம் அறியப்படுத்தியுள்ளார். தற்போதைய பிரதமரும், அமைச்சரவையும் பதவி விலகியதன் பின்னர் அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைக்க ஜனாதிபதி இணங்கியுள்ளார்.
இதற்கமைய, முதல் கட்டமாக நாளை முற்பகல் வேளையில், ஜனாதிபதி மாளிகையில் விசேட கூட்டத்திற்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
புதிய அரசாங்கத்தின் கட்டமைப்பு, பொறுப்பு வழங்கப்படும் நபர்கள் மற்றும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய காலஎல்லை என்பன குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
குறித்த கலந்துரையாடலுக்கான அழைப்பு கிடைத்துள்ள போதும், அதற்கு செல்வது தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் குறிப்பிட்டார்.
இதேவேளை, குறித்த கலந்துரையாடலுக்கு தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தாம் பங்கேற்கவுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.