
வாஷிங்டன், ஏப் 28
இந்திய- அமெரிக்க வெளியுறவு, ராணுவ அமைச்சர்கள் இடையே சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தையில், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறையில் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து ஒப்புக்கொள்ளப்பட்டது.
குறிப்பாக இரு நாட்டு மக்களுக்கு இடையேயான தொடர்புகளை நிறுவுவதற்காக மாணவர் மற்றும் கல்வியாளர் இயக்கத்தை ஊக்குவிக்க முடிவு எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இருநாட்டு கல்வி ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்காக இந்திய உயர்மட்டக்குழு ஒன்று அமெரிக்கா சென்றுள்ளது.
முன்னாள் மத்திய மந்திரி சுரேஷ் பிரபு தலைமையிலான இந்த குழுவினர் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் சுற்றுப்பயணம் செய்து அங்குள்ள தொழில்துறை தலைவர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்கள். முன்னதாக, செமஸ்டர் பரிமாற்றம், ஆசிரியப் பரிமாற்றம், ஆராய்ச்சித் திட்டங்கள், இரட்டைப் பட்டங்கள் உள்ளிட்டவற்றுக்காக அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுடன் கல்வி ஒத்துழைப்பை இந்த பிரதிநிதிகள் குழு தொடங்கும் என ரிஷிகூட் பல்கலைக்கழகம் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.