
நாட்டின் தற்போதைய நிலவரம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
கேள்வி: இந்த நாட்டின் பொருளாதாரச் சரிவுக்கு காரணமான தவறு எங்கு நேர்ந்தது?
பதில்: திறமையில்லாத அராஜக அரசு.தன்னிடம் அதிகாரம் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற ஆட்சியாளர்களின் மனநிலை.
கேள்வி: அப்படியானால், இதற்கு யார் பொறுப்பு என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
பதில்:பொருளாதார ரீதியாக மிகப்பெரிய சிக்கல் வரவிருப்பதை தெரிந்தும், எதிர்க்கட்சியும் பொருளாதார வல்லுநர்களும் கூறிய கருத்துகளுக்கு அரசு செவி மடுக்கவில்லை. தொடர்ந்து தன்னிச்சையாகச் செயல்பட்டு வந்தது. ஜனாதிபதி , பிரதமர் மற்றும் அமைச்சரவை தான் இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்.
கேள்வி: இந்த நிலையைத் தவிர்த்திருக்க என்ன செய்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
பதில்: ஆரம்பகட்டத்தில் சர்வதேச செலாவணி நிதியத்தை அரசு நாடவில்லை .பிற நாடுகளையும் பிற அமைப்புகளையும் உதவி கோரியிருக்கலாம். ஏகப்பட்ட கடன்கள் இருந்தன. அவற்றைச் செலுத்துவதைக் காட்டிலும் முறைப்படுத்தியிருக்கவேண்டும். இது திறமையின்மையைத் தான் காட்டுகிறது.
கேள்வி: நீங்கள் பெட்ரோலிய அமைச்சகத்தில் இருந்திருக்கிறீர்கள். எரிபொருள் விலையைக் கட்டுக்குள் கொண்டு வருவது எப்படி என்று நினைக்கிறீர்கள்?
பதில்:நான் பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்தபோது, ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் பெட்ரோல் விலையைக் குறைத்தோம். உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் போது நாங்களும் சற்று விலையை உயர்த்தும் போக்கைக் கொண்டு வந்தோம்.எனக்கு நன்றாக நினைவிருக்கிறது, நாங்கள் ஐந்து ரூபாய் பெட்ரோல் விலை உயர்த்தியபோது இந்தப் பிரதமர், பைக்கில் போகத் தொடங்கினார். ஆனால், இப்போது துரதிருஷ்டவசமாக நாடு முழுவதும் தவிக்கிறது.
கேள்வி: அரசியலில் உங்கள் எதிர்காலத் திட்டங்கள்?
பதில்: ஆம். இந்த அரசு பதவியேற்றதைத் தொடர்ந்து, நான் ஒரு சிறிய ஓய்வெடுக்க விரும்பினேன். இரண்டாண்டுகள் ஓய்வெடுத்தேன். இப்போது அரசியல் அமைப்பைத் தாண்டிய ஒரு தேசிய அமைப்பை உருவாக்க விழைகிறேன்.
கேள்வி: நாடு தற்போது ஒரு சிக்கலில் உள்ளது. ஒரு இடைக்கால அரசு அமைந்தால் நீங்கள் ஏதேனும் பொறுப்பேற்பீர்களா?
பதில்: இப்போது நான் நாடாளுமன்றத்தில் இல்லை. எனவே நான் பொறுப்பேற்பது எளிதன்று. ஆனால், நான் அரசியலுக்கு அப்பாற்பட்டு, நாட்டுக்குச் சேவை செய்ய விரும்புகிறேன். எனவே, அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் ஏற்பேன், ஆனால், ராஜபக்ஷவுடன் நிச்சயமாக இல்லை.
கேள்வி: இலங்கையில் தற்போது கிரிக்கெட்டின் நிலை எப்படி இருக்கிறது?
பதில்: இலங்கையில் இப்போது கிரிக்கெட் என்று ஒன்று இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. கிரிக்கெட்டின் நிலை மிகவும் தாழ்ந்து விட்டது.இந்த நாட்டில் கிரிக்கெட் வீரர்கள் திறமைசாலிகள். அவர்களை நிர்வகிப்போரிடம் தான் சிக்கல்.
கேள்வி: நிர்வாகத்திற்கு உங்களிடம் ஏதேனும் யோசனைகள் உள்ளனவா?
பதில்: கிரிக்கெட்டை மீட்க ஆறு மாதங்கள் போதும். அதைத் தான் 2015-ல் நாங்கள் முயன்றோம்.புதிய அரசு அமைந்தால், நான் அதற்கு ஆதரவளிக்க வேண்டுமானால், அல்லது நான் அரசில் பங்கெடுப்பதாக இருந்தால், கிரிக்கெட்டை மீட்டெடுப்பதை ஒரு நிபந்தனையாகவே வைப்பேன். அது நடக்கவே பிரார்த்திக்கிறேன். நம்புகிறேன் என்றார்.