நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கைக்கான உழவுவேலைகள் ஆம்பமாகியுள்ளதுடன் அதற்கான செலவுகளும் பாரியளவில் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர், சம்மாந்துறை, கல்முனை, நாவிதன்வெளி , நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, சொறிக்கல்முனை, சவளக்கடை, மத்தியமுகாம் ஆகிய பிரதேசங்களிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் அரச அதிபரின் ஆலோசனைக்கமைவாக உழவு வேலைக்கென பிரத்தியேக வரிசையில் வைத்து மட்டுப்படுத்தப்பட்டளவில் டீசல் நிரப்பப்படுகின்றன. அத்துடன் உழவு வேலைகளுக்கான கூலிகளும் பரவலாக அதிகரித்துள்ளன.
ஒரு ஏக்கர் உழவுவதற்கு உழவு இயந்திரத்திற்கான கூலி 7,000 ருபாவிலிருந்து 13,000 ருபாவாக அதிகரித்துள்ளது. 1 லீற்றர் டீசல் 340 ருபாவாக அதிகரித்துள்ளமையே இதற்குக்காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல உழவு இயந்திர உரிமையாளர்கள் டீசல் பிரச்சினையால் உழவ முடியாது என்கிறார்கள். அதனால் இன்னும் உழவமுடியாது பல விவசாயிகள் திண்டாட்டத்திலுள்ளனர்.
மேலும் விதைப்பதற்கான கூலி 1,500 ருபாவிலிருந்து 2,000 ருபாவாக அதிகரித்துள்ள அதேவேளை வரம்பு கட்டுவதற்கான கூலி 2,000 ருபாவிலிருந்து 2,500 ருபாவாக அதிகரித்துள்ளது.1 புசல் விதை நெல்லுக்கு 1,000 ருபாவால் கூடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை கடந்த தடவையைப்போல இரசாயனப்பசளை இம்முறையும் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்துடன் விவசாயிகள் விதைப்பினை ஆரம்பித்துள்ளனர். எனினும் கடந்த தடவை பசளை மாபியாக்கள் கறுப்பு சந்தையினுடாக 1 மூடை யூரியாவினை விவசாயிகளுக்கு 35 ஆயிரம் முதல் 44 ரூபா வரை விற்பனை செய்திருந்தனர்.
அதேவேளை குறித்த யூரியா இட்டு நெற்செய்கையில் ஈடுபட்டவர்களின் விளைச்சல் அதிகமாகவிருந்தது. கூடவே நெல்லின் விலையும் ஒரு மூடை 7,000 முதல் 8,000 வரை அதிகரித்தமையினால் கூடிய இலாபம் பெற்றனர். ஆனால் யூறியா இம்முறை 50,000 ரூபா வரை மாபியாக்களின் செயற்பாட்டினால் கறுப்பு சந்தையில் கிடைப்பதாக விவசாயிகளின் உரையாடலில் அறிய முடிகின்றது.
எனவே இந்த யூரியா பசளை விடயத்தில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் தலையிட்டு தீர்வொன்றினை பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.




