
ஊடகத் துறையில் இருந்து தூக்கி வீசப்பட்ட நீங்கள் நிர்க்கதியான நிலையில் அரசியல் மோகம் கொண்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தயவை நாடிச் சென்று தன்னை வளர்த்துக் கொள்வதற்காக முழுமையாக தொழிற் பட்டு மக்களை ஏமாற்றி அரசியல் செய்தமையை ஏற்க முடியாது என கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம்.எம்.மஹ்தி தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு இன்று (28) வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
அத்தருணங்களில் உங்களது தொழிலும் பொருளாதாரமும் எந்த மட்டங்களில் இருந்தன என்பதை மௌலவி முனாஜித் அவர்களின் குரற்பதிவில் இருந்து அறியக்கூடியதாக இருந்தன.
கட்சியினதும் ஆதரவாளர்களினதும் பாரிய தியாகங்கள், முயற்சிகள் காரணமாக பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றீர்கள்.
உங்களுடைய பேச்சையும் ஆற்றலையும் பார்த்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன் அடுத்த தலைவர் நீங்கள்தான் என்ற நிலமைக்கு மக்களால் கணிக்கப் பட்டீர்கள்.
இரட்டை பிரஜா உரிமைக்கும், பட்ஜட்டுக்கும், உதய கம்பன்பிலவின் நம்பிக்கை வாக்கெடுப்பிலும், துறைமுக நகர வாக்கெடுப்புக்கும் கட்சித்
தலைவர், தவிசாளர் மற்றும் தலைமை சிறையில் இருந்த போது பதில் கடமை ஏற்றிருந்த சட்டத்தரணி ருஸ்தி ஹபீப் அவர்களும் ஒவ்வொரு வாக்களிப்பிலும் கட்சியின் நிலைப்பாட்டை மிகத் தெளிவாக ஊடகங்களுக்கு பகிரங்கமாக தெரிவித்தார்கள்.
அவ்வாறிருந்தும் நீங்கள் அனைத்து வாக்களிப்புகளிலும் கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிராகவும் அரசுக்கு ஆதரவாகவுமே வாக்களித்தீர்கள்.
தலைவருக்கு அண்மையில் விடுதலை கிடைக்காது என எண்ணி சலுகைகளுக்காகவும் பதவிகளுக்காகவும் வாக்களித்த நீங்கள் நியாயவாதி போன்றும் கட்சியும் அதன் தலைவரும் அநியாயக் காரர்கள் என்றும் ஊடகங்களுக்கு கருத்துகளை தெரிவிக்கின்றீர்களே உங்களுக்கு வெட்கம் தான் இல்லையா?
உங்களுடைய நாணயத்தின் அளவு எவ்வளவு? அதன் விலை எவ்வளவு? என தற்போது நாட்டு மக்கள் மிகத் தெளிவாக அறிந்து வைத்துள்ளார்கள்.
உங்களுடைய தேர்தல் பிரச்சாரங்களின் போது நீங்கள் பேசிய பேச்சுக்களும், செய்த சத்தியங்களும் ராஜபக்ச குடும்பத்தின் மீதான உங்கள் விமர்சனங்களும் தற்போதைய உங்கள் நிலைபாடுகளும் நீங்கள் அமைச்சுப் பொறுப்பை ஏற்றமையிலும் இருந்து நீங்கள் எப்படியான உத்தமர் என்பதை மிகத் தெளிவாக பாமர மக்கள் முதல் படித்தவர்கள் வரை அனைவராலும் விளங்கிக்கொள்ள முடிகிறது.
உங்களுடைய செயற்பாடுகள் சரியானதா? அல்லது கட்சியினதும் தலைவரினதும் செயற்பாடுகள் சரியானதா? என அடுத்து வரும் தேர்தல்களில் மக்கள் உங்களுக்கு அழகாக தெளிவு படுத்துவார்கள்.
உங்களை கண்ணியப் படுத்திய அகில இலங்கை மக்கள் காங்கிரஸையும் அதன் தலைமையையும் விமர்சனங்களுக்கு உள்ளாக்கியதன் மூலம் நீங்களே உங்கள் அரசியல் வாழ்விற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளீர்கள் என்பதை மாத்திரம் மறந்துவிடாதீர்கள் என ஞாபகப்படுத்துகின்றேன் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.