அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மற்றும் தனியார்துறை ஊழியர்கள் இன்று பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
புத்தளம் – கொழும்பு முகத்திடலுக்கு முன்பாக இந்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
புத்தளம் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களில் கடமைபுரிந்து வரும் அனைத்து பிரிவு அரச ஊழியர்கள், வைத்தியர்கள், வைத்தியசாலை பணியாளர்கள், ஆசிரியர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட அனைத்து அரச மற்றும் தனியார் தொழிசங்க ஊழியர்களும் மேற்படி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
“திருட்டுக் கும்பலை விரட்டியடிப்போம்”, ” மக்களிடத்தில் கொள்ளையடித்த பணத்தை கைப்பற்றுவோம்”, “ராஜபக்ஷ குடும்பமே நாட்டை விட்டு வெளியேறு”, ” எங்களது பசுமையான நாட்டைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, உங்களது தாய் நாட்டுக்கு ஓடிவிடுங்கள்” என இதுபோன்ற தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசுக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பிக் கொண்டு எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இதனையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் புத்தளம் – கொழும்பு முகத்திடலில் இருந்து பதாதைகளை ஏந்தியவாறு, அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பிக் கொண்டு புத்தளம் தபால் நிலைய சுற்றுவட்டம் வரை ஊர்வலமாக நடந்து சென்றனர்
இந்த கவனயீர்ப்பு போராட்டத்தின் போது புத்தளம் போக்குவரத்து பொலிஸார் வீதி பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டதுடன், பொலிஸார் பாதுகாப்பு கடமைகளிலும் ஈடுபட்டிருந்தனர்.




