மரணச் சான்றிதழும் வேண்டாம், இழப்பீடும் வேண்டாம், எம் உறவுகளே எமக்கு வேண்டும்!

மரணச் சான்றிதழும் வேண்டாம், ஓ.எம்.பி. அலுவலகமும் வேண்டாம், எந்தவோர் இழப்பீடும் வேண்டாம் காணாமல் ஆக்கப்பட்டோரை மீட்டெடுத்து எம்மிடம் தாருங்கள்! காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை!

எமக்கு மரணச் சான்றிதழும் வேண்டாம், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகமும் வேண்டாம், இழப்பீடும் வேண்டாம். திருப்பித் தருவதாகக்கூறி பொறுப்பேற்ற எம் உறவுகளே எமக்கு வேண்டும். அதற்கான நீதி, இழுத்தடிப்பு இல்லாமல் வழங்கப்படவேண்டும். அதற்கு ஐ.நா. நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு, வடக்கு கிழக்கில் வலிந்து காணாமலாக்கப்பட்டோருடைய உறவினர்களின் சங்கத்தினர் கோரியுள்ளனர்.

அவர்கள் தமது உறவுகளுக்கு நீதிகோரி ஆயிரத்து 675 ஆவது நாளாக நேற்றுக் கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில், அவர்கள் அனுப்பிய செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

எம்முடன் இந்தப் போராட்டத்தில் இணைந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்களை இழந்துவிட்ட நிலையிலும், எமக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம் என்ற முனைப்புடன் உள்ளோம். இந்தநிலையில், ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ளச்சென்ற இலங்கை ஜனாதிபதி நேற்றுமுன்தினம் ஐ.நா. பொதுச் செயலருடன் விசேட சந்திப்பில் ஈடுபட்டிருந்தார்.

அதன்போது, இலங்கையில் காணாமலாக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ்களும், இழப்பீடும் வழங்குவது தொடர்பில் கூறியிருந்தார். அத்துடன் உள்ளகப் பிரச்சினைகள் உள்ளகப் பொறிமுறையினூடாகத் தீர்க்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்த ஊடக செய்திகளைப்பார்த்து அதிர்ச்சியும், ஆழ்ந்த கவலையும் அடைந்தோம். எமது உறவுகள் காணாமல் ஆக்கப்பட்ட விடயத்தில் நேரடியாக சர்வதேச சமூகத்தாலேயே குற்றம் சாட்டப்பட்டு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்தும்படி ஐ.நா. மனித உரிமை ஆணையாளரால் பரிந்துரைக்கப்பட்ட சிறிலங்காவின் ஜனாதிபதியை, அதே ஐ.நா. மன்றில் சர்வதேச சமூகம் இன்று வரவேற்று கைலாகு கொடுப்பதை நாம் கவலையுடனேயே உற்றுநோக்குகின்றோம்.

வேறு வழியின்றி எமது கடைசி நம்பிக்கையாக சர்வதேச நீதிப் பொறிமுறையே இருப்பதால், இந்த இராஜதந்திர சம்பிரதாயங்களையும் தாண்டி சர்வதேச சமூகம் பாதிக்கப்பட்டிருக்கும் எமக்கு நீதியைப் பெற்றுத்தரும் என்று நம்புகின்றோம். இந்த விடயத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை மற்றும் நீதிப்பொறிமுறை தொடர்பாக ஐ.நா. செயலாளர் உட்பட்ட சர்வதேச பிரதிநிதிகள் கேள்வி எழுப்பாமையானது, பாதிக்கப்பட்ட எமக்கு மிகுந்த கவலை அளிக்கின்றது.

2009, மே மாதம் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் பாதுகாப்புத் தரப்பினரதும், அரசினதும் உறுதிமொழிகளை நம்பி எமது உறவுகளைக் கையளித்தோம். எங்கள் முன்னலையில் எமது உறவுகள் சரணடைந்தனர். கண்கண்ட சாட்சிகளான நாம், எமது உறவுகளை மீட்பதற்காகப் போராடிக் கொண்டிருக்கின்றோம்.

ஒரு நாளாவது விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்தாலோ அல்லது அவர்களுடன் உறவு பேணியிருந்தாலோ சரணடையுங்கள் அல்லது எம்மிடம் ஒப்படையுங்கள், நாம் புனர்வாழ்வளித்து மீண்டும் உங்களிடம் ஒப்படைப்போம் என்று உறுதியளித்த படையினரதும், அரசினதும் பாதுகாப்புச் செயலர் தற்போது ஜனாதிபதியாக உள்ளார். நாம் எமது உறவுகளை உயிருடனேயே கையளித்தோம்.

எனவே அவரும் எங்கள் உறவுகளை புனர்வாழ்வளித்து எம்மிடம் ஒப்படைத்திருக்க வேண்டும். மாறாக உள்நாட்டிலும், ஐ.நா. தலைமையகத்தில் வைத்தும் மரணச் சான்றிதழும், இழப்பீடும் கொடுத்து காணாமலாக்கப்பட்டோர் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவதாகக் கூறுவது புத்த தர்மத்துக்கு ஏற்புடையதா? இந்தக்கூற்றை நாம் வன்மையாகக் கண்டிப்பதோடு புத்தபெருமானின் போதனைகளை பின்பற்றும் மற்றும் மனசாட்சி உள்ள ஒவ்வொருவரும் இதைக் வன்மையாகக் கண்டிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கிறோம்.

மேலும் உள்ளகப் பொறிமுறையில் எமது பிரச்சினையைத் தீர்ப்பதென்பது கடல் வற்றிக் கருவாடு சாப்பிடுவதற்கு ஒப்பானது. இலங்கையில் தமிழர்களுக்கு நீதி கிடைப்பதோ அரிது. அப்படியிருந்தும் அரிதாக ஓரிரு வழக்குகளில், நீதி வழங்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டாலும் ஜனாதிபதிக்கு தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி பொதுமன்னிப்பு வழங்கி விடுவார். அத்துடன் அவர்களை மேலும் இது போன்ற கொலைகளைச் செய்யத் தூண்டும் விதத்தில் ஊக்குவிப்பாகப் பதவி உயர்வும் வழங்குவார்கள் என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *