கஜேந்திரனின் கைது கடும் கண்டனத்திற்குரிய செயலாகும்! சிறீதரன் எம்.பி

தமிழின விடுதலைக்காக, காந்திய வழியில் தன் உயிரை ஆகுதியாக்கிய தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செய்தமைக்காக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் இன்று பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளமை கடும் கண்டனத்திற்குரிய செயலாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சர்வதேச நியமங்களுக்கும், நாடாளுமன்ற நிலையியற் கட்டளைக்கும் அமைவாக, விதித்துரைக்கப்பட்ட சிறப்புரிமைகளுக்கு உரித்துடைய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், தன் இனத்திற்காக உயிர்த்தியாகம் செய்த தியாகச்செம்மல் திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செய்தமைக்காக, ஆயுதமுனையில் அதியுச்ச வன்முறைப் பிரயோகங்களோடு கைது செய்யப்பட்டுள்ளமை இந்த அரசின் கோர முகத்தை இன்னுமொருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

மேலும், மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மீது, அவரது சிறப்புரிமைகளை மீறும் வகையில், இந்த ஜனநாயக நாட்டில் இத்தனை மோசமான அரசவன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டமையானது, இங்குள்ள சாதாரண தமிழர்களின் இயல்புவாழ்வுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதை தெட்டத்தெளிவாக எண்பித்துள்ளது.

தியாக தீபம் திலீபன் நினைவிடத்தில் அமைதியான முறையில் அஞ்சலி செய்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனை, ஒரு குற்றவாளியைப்போல் வலுக்கட்டாயமாக பொலிசார் கைது செய்தமைக்கு எனது வலுவான கண்டனங்களைப் பதிவுசெய்வதோடு, அவர் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *