
மலேசியா, ஏப் 29
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மலேசியாவில் உள்ள தமிழ் இளைஞனுக்கு சிங்கப்பூரில் இன்று தூக்கிலிடப்பட திட்டமிட்டிருந்த நிலையில், தற்காலிக நிவாரணமாக அவரது தண்டனை மே 20 ஆம் திகதி வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தட்சிணாமூர்த்தி காத்தையா என்ற அந்த 36 வயது நபரை, போதைப் பொருள் கடத்தல் வழக்கில் வெள்ளிக்கிழமை தூக்கிலிட திட்டமிடப்பட்டது. சிங்கப்பூரில் இவரைப் போலவே வேறொரு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டிருந்த மலேசிய தமிழர் சமீபத்தில் தூக்கிலிடப்பட்ட நிலையில், அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று நம்பப்பட்டதால் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை சர்வதேச அளவில் எதிர்ப்பைத் தூண்டியது.
இந்த நிலையில், தட்சிணாமூர்த்தி தொடர்பான வழக்கில் அவரது சார்பில் முன்பு ஆஜராகி வந்த வழக்கறிஞர் எம்.ரவி, மே 20 ஆம் திகதி தமது கட்சிக்காரரின் மேல்முறையீட்டு வழக்கு மே 20 ஆம் திகதி விசாரிக்கப்பட உள்ளதால், அவருக்கு வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது என்று கூறியுள்ளார்.
2011 ஆம் ஆண்டு சிங்கப்பூருக்குள் சுமார் 45 கிராம் (1.6 அவுன்ஸ்) ஹெராயின் கடத்தியதாக தட்சிணாமூர்த்தி குற்றம்சாட்டப்பட்டார். சக மலேசியரான நாகேந்திரன் கே. தர்மலிங்கம் புதன்கிழமை தூக்கிலிடப்படுவதற்கு முன்பு ஒரு தசாப்தத்திற்கும் மேலாக மரண தண்டனை கைதியாக சிறையில் இருந்துள்ளார்.