ஊடகவியலாளர் சிவராமின் 17ம் ஆண்டு நினைவு நாள் நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் முல்லைத்தீவு ஊடக அமையத்தில், முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவர் சண்முகம் தவசீலன் தலைமையில் இடம்பெற்றது.
ஊடகவியலாளர் மாமனிதர் சிவராமின் உருவப்படத்திற்கு, நினைவுச் சுடர் ஏற்றப்பட்டதனை தொடர்ந்து, மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலர் தூவி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில், விடுதலை பயணத்தில் சிவராமின் ஊடகப் பங்களிப்பு எனும் தலைப்பில், மூத்த படைப்பாளர் நா.யோகேந்திரநாதனின் சிறப்புரையும், இன்றைய பொருளாதார நெருக்கடியும் இதன் எதிர்கால போக்கும் என்னும் தலைப்பில், சமூக செயற்பாட்டாளர் விஜயகுமார் நவநீதனின் சிறப்புரையும், சமகாலத்தில் தமிழர்களின் கலை வடிவங்கள் எனும் தலைப்பில், சிரேஷ்ட ஊடகவியலாளர் இளங்கீரனின் கருத்துரைகளை வழங்கினர்.
நிகழ்வில், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள், சட்டத்தரணிகள் சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மாமனிதர் சிவராம் (தராகி) கடந்த 2005 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 28 ஆம் திகதி கடத்தப்பட்டு 29 ஆம் திகதி மறுநாள் பாராளுமன்றத்திற்கு அருகில் கொலை செய்யப்பட்ட நிலையில் உடலாக மீட்கப்பட்டிருந்தார். இந்த கொடூர செயல் இடம்பெற்று இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.





