ஜனாதிபதியும் பிரதமரும் தன்னிலைப் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குவது வேதனையானது! எம்.மஹ்தி

நாட்டு மக்கள் முகம் கொடுக்கும் பஞ்சம், பசி, பட்டினி, தட்டுப்பாடு, விலையேற்றம்,மின்வெட்டு, வரிசைகள் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய ஜனாதிபதியும் பிரதமரும் தமது பதவிகளை தக்க வைக்கும் தன்னிலை பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்குவது மிக வேதனையானது என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம். எம் .மஹ்தி குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்று(29) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

அரசாங்கத்தின் பிழையான நிருவாகம், ஊழல் , மோசடிகள் காரணமாக ஏற்படுத்தப்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்ற மக்கள் தங்களால் தாங்க முடியாமல் எதிர்கால சந்ததியினரேனும் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற அடிப்படையில் அரசுக்கும் ராஜபக்ஷர்களுக்கும் எதிராக ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடாத்தி உயிரிழப்புகளையும் சந்தித்து வருகின்றனர்.

நடந்தேறும் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு அப் பிரச்சினைகள் உண்டாக காரணமான ஜனாதிபதி, பிரதமர் உட்பட அனைத்து ராஜபக்சர்களும் வீடு செல்வதே அன்றி வேறில்லை என்ற நிபந்தனையுடன் போராடுகின்ற மக்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்காது தொடர்ந்தும் பதவியில் நீடிக்க முயற்சிகளை எடுத்து வருவது மேலும் இந் நாட்டின் நிலைமையை மோசமடையச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

எனவே இதன் பாதிப்புகளை கருத்திற் கொண்டு ஜனாதிபதி பிரதமர் உட்பட அனைவரும் மக்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளித்து உடனடியாக பதவிகளை இராஜினாமா செய்து புதிய அரசாங்கத்தை உருவாக்க வழிவிட வேண்டும் எனவும் அவ்வறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *