
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளால் தோற்றம் பெற்றுள்ள மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதற்கு நியூசிலாந்திடமிருந்து உதவிகளை எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் மைக்கல் அப்லிடனுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே சுகாதார அமைச்சர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது இலங்கைக்கும் நியூசிலாந்திற்குமிடையில் நீண்ட காலமாக நிலவும் நட்புறவு தொடர்பில் சுகாதார அமைச்சர் நினைவு கூர்ந்தார்.
இலங்கையுடன் தொடர்ந்தும் நட்புறவைப் பேணுகின்றமைக்கு நியூசிலாந்திற்கு நன்றியையும் தெரிவித்தார்.
மேலும் இலங்கையில் தற்போதை நிலைவரங்கள் தொடர்பிலும் , சுகாதாரத்துறை எதிர்கொண்டுள்ள சவால்கள் தொடர்பிலும் நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் கேட்டறிந்து கொண்டார்.
இது தொடர்பில் தெளிவுபடுத்திய சுகாதார அமைச்சர், இந்த சந்தர்ப்பத்தில் நியூசிலாந்து அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
குறிப்பாக நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்ய உதவுமாறு கேட்டுக் கொண்டார்.
இதற்கு பதிலளித்த நியூசிலாந்து உயர்ஸ்தானிகர், நியூசிலாந்தும் அந்நாட்டில் வாழும் இலங்கையர்களும் உதவி உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக இலங்கைக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.