
பிரதமர் மகிந்த ராஜபக்சவை நீக்கி விட்டு புதிய பிரதமர் நியமிக்கப்பட்டால், நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட பசில் ராஜபக்ச தயாராகி வருவதாக தகவல் கிடைத்துள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியை விட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அதிகளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும், மகிந்த ராஜபக்சவுக்கு பதிலாக வேறு ஒருவர் பிரதமராக நியமிக்கப்படுவது மாத்திரமல்லாது, பசில் ராஜபக்ச தலைமையிலான அணியினர் எதிர்க்கட்சியில் அமர்வது ஆகிய இரண்டும் திரிபு நடவடிக்கைகள் எனவும் இந்த இரண்டு அணிகளும் ஒரே நோக்கத்தை அடிப்படையாக கொண்டவை எனவும் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பாத யாத்திரை ஆரம்பித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தலைமையிலான அணியினர் கொழும்பு வந்தடையும் போது, அரசியல் களத்தில் எதிர்பாராத விதமான மாற்றங்கள் ஏற்படக் கூடும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

