
கொழும்பு,ஏப் 29
நாடு மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளமையினால் நாட்டின் விற்பனை வரியை அதிகரிப்பதைத் தவிர வேறு வழி இல்லை என நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
ஊடகத்துக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே நிதியமைச்சர் அலி சப்ரி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு வரிகளை அதிகரிப்பதற்கான கடினமான தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அரசாங்கத்தின் வருமானத்திற்கும் செலவுக்கும் இடையிலான வித்தியாசத்தை குறைப்பதற்கு அவசியமான வழிமுறையைக் கண்டறிய வேண்டும் எனவும் நிதியமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், கடந்த 2019 ஆம் ஆண்டில் பெறுமதி சேர் வரியை 8 வீதமாகக் குறைத்தமை அரசாங்கம் மேற்கொண்ட முக்கிய தவறாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய பெறுமதி சேர் வரியை 13 அல்லது 14 வீதமாக அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், எதிர்வரும் 8 மாதங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அவசியமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், எதிர்வரும் ஆண்டளவில் இலங்கை தனது சர்வதேச கடன் கொடுப்பனவுகளை மீள ஆரம்பிக்கும் என தான் நம்புவதாகவும் நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டில் மேற்கொள்ளப்படும் இறக்குமதிகளுக்கான கொடுப்பனவுகளை வங்கி முறைமையின் ஊடாகவே மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க அறிவித்துள்ளார்.
உள்நாட்டு அந்நிய செலாவணி சந்தையை மேம்படுத்த எடுக்கப்பட்டுள்ள புதிய நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த விடயம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இதன் ஊடாக வங்கி முறைமையின் பணப் புழக்கத்தினை அதிகரிக்க முடியும் எனவும், இந்த விடயம் பொருளாதார மேம்பாட்டுக்கு உதவியாக அமையும் என தான் நம்புவதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், பெற்றோலியக் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மற்றும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை ஆகிய அரச நிறுவனங்கள் அதிக நட்டத்தை ஈட்டும் நிறுவனங்களாக இனங்காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய அரசாங்கத்திற்கு சுமையாக காணப்படும் அனைத்து அரச நிறுவனங்களும் மறுசீரமைக்கப்பட்டு அந்த சுமையிலிருந்து அரசாங்கத்தை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த பெப்ரவரி மாதம் நாட்டின் இறக்குமதி செலவு 2 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்ட நிலையில், கடந்த மார்ச் மாதம் 1 தசம் 7 பில்லியன் டொலர்களாக குறைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், எதிர்வரும் மாதங்களிலும் நாட்டின் இறக்குமதி செலவினம் குறைவடையும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து நன்கொடைகளைப் பெற்றுக் கொள்வதற்காக இலங்கை மத்திய வங்கியினால் ஆரம்பிக்கப்பட்ட வைப்புக் கணக்கிற்கு இதுவரை 37 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அதனை மருந்துப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக சுகாதார அமைச்சுக்கு வழங்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்களினால் மாதாந்தம் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டுக்கு அனுப்பப்படுவதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த நிதியினை உள்நாட்டு வங்கி முறைமையின் ஊடாக நாட்டுக்கு அனுப்புவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பதற்கு அரசியல் ஸ்திரத்தன்மை மிக முக்கியமான காரணியாக காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.