நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கைது செய்யப்பட்டமை தொடர்பில் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கம் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பில், மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு கிழக்கு இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் தெரிவிக்கையில்,
தியாகி திலீபனின் நினைவு நாளில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தொடர்ச்சியாக விளக்கேற்றி வருகிறார்.
இந் நிலையில், அவர் இன்று கைது செய்யப்பட்டிருக்கிறார். அவர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்றும் பாராது அவரை அடித்து இழுத்துச் சென்றமை வேதனைக்குரிய விடயமும், கண்டனத்திற்கு உரிய விடயமும் ஆகும்.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலை என்றால், சாதாரண மக்களுக்கு என்ன நிலைமை என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும், இவர் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதால் தான் இவர்கள் இப்படி செய்கிறார்கள் என்றும், சிங்கள நாடாளுமன்ற உறுப்பினருக்கு இப்படி செய்ய முடியுமா எனவும், அந்த மோசமான செயலை தாம் கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, தமிழ் மக்கள் இருக்கின்ற பகுதியில் சிங்கள பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தியுள்ளனர். இதனால்,
கஜேந்திரன் தமிழில் சொல்கின்ற விடயங்களை அவர்களால் புரிந்து கொள்ளவும் முடியவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.