தமிழக அரசின் உதவிகளை பெற்றுக்கொடுக்க இந்திய மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும்! – இராதா எம்.பி. கோரிக்கை

தமிழ்நாடு இலங்கைக்கு வழங்குவதற்கு முன்வந்துள்ள உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கு, இந்தியாவின் மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

‘இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக சட்டசபையில் பிரேரணை ஒன்றை முன்வைத்து அந்த பிரேரணை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. உண்மையில் இந்த நடவடிக்கை, தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் இலங்கை மக்கள் மீது கொண்டுள்ள அக்கறையையும் உறவையும் பொறுப்பையும் எடுத்துக் காட்டுகின்றது.

ஒருபுறத்தில் இந்திய மத்திய அரசின் ஊடாக, பாரத பிரதமர் மோடி முன்னெடுத்து வருகின்ற மனிதாபிமான உதவிகள் காரணமாகவே, கடந்த சில வாரங்களாக அத்தியாவசியப் பொருட்களும் எரிபொருட்களும் ஓரளவேனும் தட்டுப்பாடு இல்லாமல் கிடைத்தது.

அந்த உதவிகள் கிடைக்காவிட்டால் நிச்சயமாக நாம் சோமாலியாவைவிட மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருப்போம்.

அந்தவகையில் பாரத பிரதமர் மோடியினால் உடனடியாக எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைகளை இலங்கை மக்கள் அனைவரும் மறந்துவிட மாட்டார்கள்.

இந்நிலையில், தமிழ்நாட்டு அரசாங்கம் இலங்கை ரூபாயில் சுமார் 575 கோடி ரூபாய் பெறுமதியான பொருட்களை வழங்குவதற்கு சட்டசபை ஊடாக ஏகமனதான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.

உண்மையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட அனைத்து தமிழ்நாட்டு மக்களும் எங்கள் மீது செலுத்துகின்ற அன்பையும் ஆதரவையும் நாம் மறந்துவிட முடியாது.

எவ்வாறாயினும் தமிழ்நாடு இலங்கைக்கு வழங்குவதற்கு முன்வந்துள்ள உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கு மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும்

அதேபோன்று, இன்று நாம் அனைவரும் இலங்கையர்களாக இணைந்திருக்கின்றோம். இந்த இணைவில் பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து இலங்கையர்களும் புரிந்துணர்வுடன் நடந்துகொள்வார்கள் என நான் எதிர்பார்க்கின்றேன்’ என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *