சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பிரதமரின் வாழ்த்துச் செய்தி

அனைத்து குடிமக்களின் முன்னேற்றத்திற்காகவும் இரவு பகல் பாராது பாடுபடும் அன்பான உழைக்கும் மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இரண்டு வருடங்களுக்கும் மேலாக உலகளாவிய தொற்றுநோய் நிலைமைக்கு மத்தியில் பல்வேறு பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்ட நீங்கள், நாட்டில் காணப்படும் இந்த பொருளாதார நெருக்கடியினாலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பது இரகசியமல்ல.

எதிர்பாராத விதமாக முகங்கொடுக்க நேரிட்டுள்ள இப்பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியிலும், மிகுந்த அர்ப்பணிப்புடனும், நிதானத்துடனும் செயல்பட்டு நீங்கள் நாட்டுக்கு சிறந்த முன்மாதிரியாக திகழ்கின்றீர்கள்.

தொழிலாளர் போராட்டத்திற்காக உங்களுடன் கைக்கோர்த்திருந்த நான், பொறுப்பு கூற வேண்டிய சகல சந்தர்ப்பத்திலும் உங்களது உரிமைகளுக்காக நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகளையும் பொறுப்புகளையும் ஒருபோதும் புறக்கணித்ததில்லை.

எனினும் நாட்டில் ஏற்பட்டுள்ள இப்பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நாம் அனைவரும் ஒன்றாக கைக்கோர்த்து, முதலில் இச்சவாலை வெற்றி கொள்ள வேண்டும்.

பொருளாதார நெருக்கடியை நிர்வகிப்பதற்கு இதுவரை முன்னெடுக்க வேண்டிய சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்திருப்பதுடன், தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் அதற்கான ஆதரவை பெற்று வருகிறது.

இந்த அனைத்து முயற்சிகளினதும் இறுதி நோக்கம் ஒரு சிறந்த நாட்டை நிர்மாணிப்பதாகும். அதற்காக உழைக்கும் மக்களின் மகத்தான அர்ப்பணிப்பை சர்வதேச தொழிலாளர் தினமான இன்றைய தினத்தில் மிகுந்த மரியாதையுடன் நினைவு கூருகிறேன்.- என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *