
அரசாங்கம் தங்களின் ஆட்சி அதிகாரங்களை தொடர்ந்தும் தக்கவைப்பதற்காக தமிழ் புலம்பெயர் மக்களின் நிதி உதவிகளைப் பெறுவதற்காகவும், நாட்டில் கிளர்ந்தெழுந்துள்ள சிங்கள மக்கள் தங்களின் போராட்டத்திற்கு தமிழ் மக்களின் பங்களிப்பினை பெறுவதற்காகவும், அவர்களை பயன்படுத்துக்கிறார்கள் என ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் கருத்து தெரிவித்திருந்தார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டினுடைய பொருளாதார நெருக்கடிக்கு எதிராக அரசாங்க ஆட்சியாளர்கள் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ஆரம்பித்த சிங்கள மக்களின் போராட்டங்கள் தற்போது தீவிரமடைந்து செல்வதை அவதானிக்க முடிகிறது.
தமிழ் இன மக்கள் தமிழ் தேசியத்தை பாதுகாத்து நிற்கின்ற சூழ்நிலையில் சிங்கள மக்கள் தன்னெழுச்சி போராட்டத்திற்காக தமிழ் மக்களை அழைத்து நிற்கிறார்கள்.
அரசாங்கம் தங்களின் ஆட்சி அதிகாரங்களை தொடர்ந்து தக்க வைப்பதற்காக தமிழ் புலம்பெயர் மக்களின் நிதி உதவிகளைப் பெறுவதற்காகவும், நாட்டில் கிளர்ந்தெழுந்துள்ள சிங்கள மக்கள் தங்களின் போராட்டத்திற்கு தமிழ் மக்களின் பங்களிப்பினை பெறுவதற்காகவும், அவர்களை பயன்படுத்துக்கிறார்கள். இதற்கு பங்காளியாக போராடுவது என்பது தவறான விடயமாகும்.
ஏனெனில், பௌத்த மேலாதிக்கத்தின் கீழ் பெரும்பான்மை சிங்கள மக்கள் ஊடாக ஆட்சியை அமைத்து செயற்பட்டார்கள். சிங்கள மதத்தலைவர்கள் யுத்த காலங்களில் இனப்படுகொலைக்கு ஆதரவு வழங்கினார்கள்.
இதற்கமைய முள்ளிவாய்க்காலில் கர்ப்பிணி தாய்மார்கள் சத்துணவிற்காக வரிசையில் நின்ற போது குண்டு தாக்குதல் நடத்தி படுகொலை செய்தார்கள், ஆண்கள் படுகொலை செய்யப்பட்டார்கள், பெண்கள் இராணுவத்தினால் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டார்கள், உண்ண உணவின்றி அனாதை முகாம்களில் இருந்தார்கள். இதனை அனுபவித்த தமிழ் மக்களை சிங்கள மக்கள் அனுசரிக்கவில்லை.
இந்த வேளையில் ராஜபக்ஷ குடும்பத்துடன் சிங்கள பௌத்தர்கள் அனைவரும் இணைந்து வெற்றிக் கீதங்களை இசைத்து கொண்டாடினார்கள். இந்த நிலைமை தங்களுக்கும் ஏற்படும் என சிங்கள மக்கள் உணரவில்லை.
தற்போதைய அரசாங்கமானது இலங்கை நாட்டிற்கு நன்மை செய்ய போவதாக இல்லை. மாறாக நாட்டினை வியாபாரத் தளமாக மாற்றி சர்வதேச நாடுகளெங்கும் தங்கள் பணத்தினை வைப்பிலிட்டு சுகபோக வாழ்க்கை வாழ்வதற்கு ஆட்சியில் இருக்கிறார்கள்.
தற்போதைய போராட்டங்களில் மகாசங்கத்தைச் சேர்ந்தவர்கள் இனவாதக் கருத்துக்களை விதைத்து வருகிறார்கள். இந்த நிலைமைக்கு இந்தியா காரணம் எனவும் இந்தியாவின் பின்னணியில் இந்த மக்கள் போராட்டம் இடம்பெறுகிறது இதனை தடுக்க வேண்டும், இல்லையெனில் 13ம் திருத்த சட்டத்திற்கு அமைவாக இலங்கை இரண்டாக பிரிந்து தமிழ் பெரும்பான்மை இனமாக இந்தியாவுடன் இணைந்து இலங்கையில் ஆட்சி ஏற்பட நிலை உருவாகும் என்ற கருத்துக்களை சிங்கள மக்களிடையே உருவாக்கி வருகிறார்கள்.
அந்தவகையில் இலங்கை தமிழ் மக்களுக்கு இந்தியா செயற்படுமெனின், எதிர்காலத்தில் தமிழ் மக்களின் அபிலாசைகள், எதிர்பார்ப்புக்களுக்காக இந்தியா அரசுடன் இணைந்து செயற்பட தயாராக உள்ளோம்.
இந்த போராட்டத்தினை அடக்குவதற்காக இராணுவத்தினை அரசாங்கம் பயன்படுத்துகிறது. இனவாதத்தினை ஏற்படுத்தி பிரிவினைகளை ஏற்படுத்த முயலும் சிங்கள பௌத்த மதத்தலைவர்களின் செயற்பாடுகளை முடக்குவதனால் இந்த நாட்டில் ஒரு ஜனநாயக ஆட்சி மலரும்.- என்றார்