
தற்போதைய நெருக்கடி நிலையைத் தீர்ப்பதற்காக, 3 பௌத்த பீடங்களின் தேரர்களினால், ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள யோசனை குறித்து, தீவிர அவதானம் செலுத்துவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியுடன் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இது குறித்து அவதானம் செலுத்தப்பட்டதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ, தவிசாளரான அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், பொதுச் செயலாளர் சாகர காரியவசம் உள்ளிட்டோர், ஜனாதிபதியுடன் நேற்றிரவு 7 மணியளவில், ஜனாதிபதி மாளிகையில் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு மத்தியில், கட்சி என்ற அடிப்படையில் நாட்டுக்கு முன்னுரிமையளிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இதன்போது தெரிவித்துள்ளது.
3 பௌத்த பீடங்களின் தேரர்களினதும், சிவில் அமைப்புக்களினதும் யோசனைகள் குறித்து தமது கட்சி மிகவும் அவதானத்துடன் உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காக, சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்துள்ள யோசனை தொடர்பில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அவதானம் செலுத்தியுள்ளது.
அந்த யோசனையை தமது கட்சிக்கு வழங்குமாறு கோருவதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
குறித்த யோசனை தொடர்பில், தமது கட்சி கலந்துரையாடி, பெரும்பான்மையினரின் இணக்கப்பாட்டின் அடிப்படையில், அது குறித்து நடவடிக்கை எடுப்பதாகவும் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.