
கொழும்பு, ஏப் 30
ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள அரச எதிர்ப்புப் பேரணி இன்று (30) ஐந்தாவது நாளை எட்டியுள்ளது.
கடந்த 26 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தி கண்டியில் ஆரம்பித்த பேரணி, நாளைய தினம் கொழும்பில் மே தின பேரணியுடன் இணையவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாளை (01) மே தினத்தை முன்னிட்டு பேலியகொடையிலிருந்து கொழும்பு, சுதந்திர சதுக்க மாவத்தை நோக்கிப் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.
இதேவேளை, காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் மக்கள் எழுச்சி போராட்டம் இன்று 22ஆவது நாளாகவும் இடம்பெறுகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி இன்றைய தினமும் ஆர்ப்பாட்டம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.