
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவையை தற்கவைத்துக்கொண்டு அமைக்கப்படும் இடைக்கால அரசாங்கம் என்பது அர்த்தமில்லாத நகைச்சுவை மாத்திரமே என மக்கள் விடுதலை முன்னணியின் பிரதான செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இடைக்கால அரசாங்கமோ அல்லது வேறு எந்த அரசாங்கம் பற்றியோ சிந்திக்கும் முன்னர் மக்களின் நிபந்தனைகளான ஜனாதிபதியும் அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்பதை பற்றி சிந்திக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டின் ஒட்டு மொத்த மக்களும் வாரக்கணக்கில் வீதியில் இறங்கி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மாத்திரமல்லாது முழு அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என போராட்டம் நடத்தும் போது, அதனை செவிமடுக்காது இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதில் அர்த்தமில்லை.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர் மத்தியில் ஐக்கியத்தை ஏற்படுத்த முடியாத நிலைமையில் சர்வக் கட்சி இடைக்கால அரசாங்கம் பற்றி பேசுவது நகைப்புக்குரியது எனவும் ரில்வின் சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.