
”தமிழர்களின் உரிமையை சிங்கள தேசம் ஏற்றுக் கொண்டால் மாத்திரமே பொருளாதாரத்திலும் அரசியலிலும் வெற்றி காண முடியும்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்!
கிளிநொச்சி வட்டக்கச்சி இராமநாதபுரம் மேற்கு அ.த.க பாடசாலையின் மறைந்த முன்னாள் அதிபர் திரு கனகராஜா மகேந்திரராஜா அவர்களது நினைவு நிகழ்வும் பொற்கால மலர் எனும் நூல் வெளியீட்டு விழாவும் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்!
தென்பகுதியில் சிங்கள மக்கள் தெருக்களில் இறங்கிப் போராடுகிறார்கள்,
இந்தப் போராட்டத்தில் தமிழர்களுடைய பங்கு என்ன என்று என்னிடம் ஒருவர் கேட்டிருந்தார்.
தங்களுடைய கணவன்மாரை ஒப்படைத்த எங்களுடைய சகோதரிகள், தாய்மார்கள் தங்களுடைய கணவன் வருவான் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த சிங்கள சகோதரர்களால் பதில் கூற முடியுமா? என்று கேட்டிருந்தேன்.
ஆயிரமாயிரம் உயிர்களை இந்த மண்ணில் விதைத்திருக்கின்றோம். தமிழர்களுடைய வரலாற்று தாயகம் வடக்கு கிழக்கு என்று சொல்வதற்கு ஏன் இன்னும் ஒரு சிங்களச் சகோதரர்களால் முடியவில்லை.
இன்று போராட்டத்தில் ஈடுபடும் தென்பகுதி சிங்கள இளைஞர்கள் சொல்லுகின்றார்கள் ”இது ஒரு சிங்கள பௌத்த நாடு”என்று. மகாவம்சத்தில் ஊறிப்போன நீங்கள் இந்த பௌத்த சிங்கள பேரினவாத கொள்கையோடு போராடினால் உங்களுடன் நாங்கள் சேர்ந்து போராட முடியுமா?
நாங்கள் இந்த மண்ணினுடைய பூர்வீகக் குடிகள். இன்று நாங்கள் எங்கள் இறைமையை இழந்து சுதந்திரத்தை இழந்து அடிமைகளாக எங்களைச் சுற்றி ராணுவ வேலிக்குள் திறந்தவெளிச் சிறைச்சாலைக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
நாங்கள் நாங்களாக இந்த மண்ணிலே வாழுகின்ற உரிமை இருக்கின்றது என்பதை நீங்கள் எப்போது ஏற்றுக்கொள்ள துணிகின்றீர்களோ அப்போதுதான் இந்த நாட்டினுடைய பொருளாதாரமும் அரசியலும் முன்னேற்றமடையும் என்று தெரிவித்தார்.