ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் ஏற்பாட்டில் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தமிழர் தேசத்தில் எவ்வாறு எதிர் கொள்வது தொடர்பில் யாழில் இன்று பிற்பகல் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் சமயத் தலைவர்கள் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனபலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஏற்பாட்டாளர்களில் ஒருவரான சிவரூபன் கருத்து தெரிவிக்கையில்,
தென்னிலங்கையில் எழுந்துள்ள அரசியல் பொருளாதார நெருக்கடியை தமிழர் தேசம் எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றது என்பது பற்றிய பொது அமைப்புக்கள் மற்றும் சங்கங்களுடன் கலந்துரையாடி அடுத்த கட்டத்திற்கு எவ்வாறு கொண்டு செல்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
அந்த வகையில் இன்றையதினம் முக்கியமாக “உங்களை புரிந்து கொள்கிறோம், எங்களை புரிந்து கொள்ளுங்கள்” எனும் கோசத்தின் கீழே இன்று கலந்துகொண்ட அமைப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைவது என்றும் தொடர்ச்சியாக பல அமைப்புக்களை வடக்கு கிழக்கு சார்ந்தும் வடக்கு கிழக்கிற்கு வெளியே தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் உள்ள அமைப்புக்களையும் இணைத்து இந்த அரசியல் பொருளாதார நெருக்கடியை தமிழர்களுக்குரிய அபிலாசைகளை வெல்வதற்குரிய வகையிலேயும் எதிர் காலத்திலே வரவிருக்கின்ற பொருளாதார பிரச்சினையை தற்சார்பு பொருளாதாரத்தின் மூலம் எதிர்கொள்வது என்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவித்தார்.
அத்துடன் இக்கலந்துரையாடலின் தொடர்ச்சி வேறு பல மாவட்டங்களிலும் நடத்தப்பட்டு மேலும் பல தொழிற் சங்கங்களும் அமைப்புக்களும் இணைக்கப்பட்டு தொடர்ச்சியான கலந்துரையாடல் மூலம் அடுத்து என்ன செய்வது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் மேலும் தெரிவித்தார்.




