
கொழும்பு,ஏப் 30
உலகத் தொழிலாளர்களின் சுதந்திரமும், விடுதலையுமே புரட்சிகர மே 01 தொழிலாளர் தினம்.
இந்த புரட்சிகர நிகழ்வை உலகெங்கும் உள்ள தொழிலாளர்கள் கொண்டாடும் இவ்வேளை இலங்கையில் வேலையின்றி, வேலை மறுக்கப்பட்டு ஒட்டிய வயிறு, பட்டினியுடன் பாட்டாளி மக்களின் துன்பியல் தினமாக இம்முறை மேதினம் அனுஸ்டிக்கப்படுகின்றது என தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ்.நிஷாந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை சனிக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில்,
முதலாளிகள் பாட்டாளி மக்களை ஒடுக்கிய காலம் போய் இன்று ஜனநாயக போர்வைக்குள் ஔிந்து கொண்டு அனைத்து தொழில்களையும் தன்வசப்படுத்தி வைத்துக்கொண்டிருக்கும் ராஜபக்ஷ குடும்ப அரசு நாட்டின் பாட்டாளி மக்களை வீதிக்கு கொண்டுவந்துள்ளது.
தமிழ் இனத்தின் பாட்டாளி மக்களை கடந்த காலத்தில் கொன்றொழித்த ராசபக்ஷ குடும்பம் மீண்டும் சிங்கள மக்களினதும், சிங்கள பாட்டாளி வர்க்கத்தினரதும் இலட்சக் கணக்கான வாக்குகளை போலி வாக்குறுதிகள் மூலம் பெற்று ஆட்சிபீடமேறி இன்று சிங்கள மக்களையும், சிங்கள தொழிலாளர்களையும் பட்டினியால் கொன்றொழிக்க தொடங்கியுள்ளது.
இந்த கோடுங்கொல் ஆட்சியின் அதிகாரம் பறிக்கப்படும் வரை இலங்கையின் பட்டாளி மக்கள் அனைவரும் வீதிக்கு இறங்கி போராட வேண்டும் என்று இந்த மேதினத்தில் தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை அறைகூவல் விடுக்கின்றது என்றுள்ளது.

