தமிழகம் செல்ல முற்பட்ட 11 பேருக்கும் பிணை! படகோட்டிகளுக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாணம் பலாலி கடற்பரப்பின் ஊடாக தமிழகம் செல்ல முற்பட்ட 11 பேருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளதோடு, படகோட்டிகள் இருவரையும் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை தில்லை நகர் பகுதியைச் சேர்ந்த 3 ஆண்கள் , 3 பெண்கள் 5 சிறுவர்கள் மற்றும் படகோட்டிகளான பலாலி அண்ரனிபுரம பகுதியைச் சேர்ந்த ஓட்டி களான 2 ஆண்களும் உள்ளடங்கலாக 13 பேர், யாழ்ப்பாணம் பலாலி கடற்பரப்பின் ஊடாக நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு இந்தியா நோக்கி படகொன்றில் பயணித்த வேளை கடல் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன் அவர்கள் பயணித்த படகு மற்றும் அதற்கான வெளியிணைப்பு இயந்திரம் , இயந்திரத்திற்கு தேவையான எரிபொருள் என்பவையும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட 13 பேரையும், மீட்கப்பட்ட படகு , இயந்திரம் உள்ளிட்டவற்றை கடற்படையினர் சட்ட நடவடிக்கைக்காக பலாலி பொலிஸாரிடம் கையளித்தனர்.

பொலிஸார் அவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் நேற்று சனிக்கிழமை மாலை மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.

அத்துடன் சான்று பொருட்களான படகு , வெளியிணைப்பு இயந்திரம் உள்ளிட்டவற்றையும் மன்றில் பாரப்படுத்தினர்.

வழக்கினை விசாரித்த மல்லாகம் நீதவான் படகோட்டிகள் இருவரையும் எதிர்வரும் 12ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறும் , ஏனைய 11 பேரையும் பிணையில் செல்ல அனுமதித்த நீதவான் 12ஆம் திகதிக்கு வழக்கினை ஒத்திவைத்து கட்டளையிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *