நாடு உத்தியோகபூர்வமாக வங்குரோத்து அடைந்து விட்டது – நிதி கட்டமைப்பு வெடித்து சிதறி வருகிறது!

நாடு கடந்த ஏப்ரல் மாதம் 12 ஆம் திகதியில் இருந்து உத்தியோகபூர்வமாக வங்குரோத்து அடைந்து விட்டது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

மே தினத்தை முன்னிட்டு ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனை கூறியுள்ளார். நாடு வங்குரோத்து அடைந்துள்ள நிலைமையில், வெளிநாட்டு முதலீடுகள், வெளிநாடுகளுடன் மேற்கொள்ளும் கொடுக்கல், வாங்கல்கள், வெளிநாட்டு வர்த்தகம் என்பன நின்று போயுள்ளன.

வங்கி கட்டமைப்பு மிகவும் ஆபத்தான நிலைமையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. நிதி கட்டமைப்பு வெடித்து சிதறி வருகிறது.

இதன் காரணமாக சில நாட்களுக்கு அனைத்து அபிவிருத்தித் திட்டங்களையும் நிறுத்தும் அறிவிப்பை அரசாங்கம் வெளியிட நேரிட்டது. இவற்றின் மூலம் நாட்டின் அபிவிருத்தி முற்றாக ஸ்தாபித்து போயுள்ளதை காண முடிகிறது.

குறிப்பாக தனியார் துறையின் 26 லட்சம் வேலை வாய்ப்புகள் பாரதூரமான ஆபத்துக்கு உள்ளாகி உள்ளது. சுற்றுலாத்துறைக்கு மேலதிகமாக தொழிற்சாலைகளும் தற்போது மூடப்பட்டு வருகின்றன.

நாட்டிற்குள் இயங்கிவந்த முக்கியமான தொழிற்சாலைகள், ஆடை உற்பத்திதுறை என்பன வேறு நாடுகளை நோக்கி கொண்டு செல்லப்படுகின்றன.

அதேபோல் அரச சேவையும் படிப்படியாக பாரதூரமான நெருக்கடியை நோக்கி செல்ல உள்ளது எனவும் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *