அமைச்சரின் அச்சுறுத்தலுக்கு அஞ்சப் போவதில்லை! கொள்கலன் வண்டி உரிமையாளர்கள் அதிரடி அறிவிப்பு

முடிந்தால், தனியார் எரிபொருள் கொள்கலன் வண்டி உரிமையாளர்களின் அனுமதிப் பத்திரங்களை இரத்துச் செய்யுமாறு இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தனியார் கொள்கலன் வண்டி உரிமையாளர்களின் சங்கத்தின் செயலாளர் டி.வி.சாந்த சில்வா சவால் விடுத்துள்ளார்.

எரிசக்தி அமைச்சரின் அச்சுறுத்தல்களுக்கு தமது சங்கத்தினர் அஞ்சமாட்டார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.

புதிய அனுமதிப் பத்திரங்களை வழங்க போவதில்லை என்ற கதைகளை கேட்டு கொள்கலன் வண்டி உரிமையாளர்கள் அஞ்ச மாட்டார்கள்.

புதிய அனுமதிப் பத்திரத்தை பெற்று வண்டிகளை சேவையில் ஈடுபடுத்த குறைந்தது ஆறு மாத காலம் வரை செல்லும். இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் அமைச்சரை தவறாக வழி நடத்தியுள்ளமை குறித்து வருந்துகிறோம்.

கொள்கலன் வண்டி உரிமையாளர்கள் அனைவரும் அனுமதிப் பத்திரங்களை விற்பனை செய்து, அந்த பணத்தை வங்கியில் வைப்புச் செய்து வாழ்வதற்கு தயாராக இருக்கிறோம்.

எரிபொருள் விலை அதிகரிப்புடன் கொள்கலன் வண்டிகளின் கட்டணங்களை உயர்த்துவதற்கு விலை சூத்திரத்தின்படி நடவடிக்கை எடுத்தால் எந்த பிரச்சினையும் இல்லை.

அரசாங்கம் அடக்குமுறையை பயன்படுத்துமாயின் எதிர்வரும் 6 ஆம் திகதி நடத்தப்படும் பாரிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தயாராக இருப்பதாகவும் சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *