
இந்திய அரசினால் உருவாக்கப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தம் பிரகாரம் உருவான 13வது திருத்தச்சட்டத்தினை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய பா.ஜ. கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பா.ஜ.க அண்ணாமலை தமிழ் தேசிய கூட்டமைப்பினருடனான சந்தித்தபின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு அண்டை நாடான இந்தியா இலங்கைக்கு பல்வேறுபட்ட உதவிகளை வழங்குகின்றது.
எரிபொருள், மருந்து மற்றும் பண உதவி போன்ற பல்வேறுபட்ட உதவிகளை இலங்கைக்கு இந்திய அரசு வழங்கி வருகின்றது.
அதேபோலத்தான் இலங்கை – இந்திய ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு நமது இந்திய நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அண்மைய இலங்கை விஜயத்தின்போது இலங்கை ஜனாதிபதிக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
அது விரைவில் நடைமுறைத்தப்படும் சாத்தியப்பாடும் உள்ளது.
அதேபோல் தற்போது உள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக இலங்கையிலிருந்து அகதிகளாக இந்தியா வருவோருக்கு கடுமையான சட்டங்களை பிரயோகிக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளோம்.
இலங்கைதமிழ் மக்களை தொப்புள் கொடி உறவுகளை மிகவும் அன்பாகவும் ஆதரவாகவும் நேசக்கரம் நீட்டி பார்க்கின்றோம்.
தென் இந்திய மீனவர்களால் வடபகுதி மீனவர்கள் பாதிப்பினை எதிர்நோக்குகிறார்கள் என தெரிவிக்கப்படுகின்றது. அது கட்டாயமாக தீர்க்கப்பட வேண்டிய விடயம்தான்.
ஆனால் சிறையில் இருப்பதற்காக எந்த இந்திய மீனவனும் இலங்கை கடற்பரப்புக்குள் வருவதில்லை. ஏதோ ஒரு தவறால் வருகின்றார்கள் அது தொடர்பில் உரிய கவனம் எடுக்கப்படும்.
அதேநேரம் இந்தப் பிரச்சணை 1974ஆம் ஆண்டிற்கு முன்பு இருக்கவில்லை. கச்சதீவு ஒப்பந்தம் இடம்பெற்றதன் பின்பே ஏற்பட்டது. 1974ஆம் ஆண்டு ஒப்பந்த்த்தின்6வது சரத்தின் பிரகாரம் கச்சதீவு பகுதியில் இந்தியா மீன்பிடிக்க முடியும் 1976ஆம் ஆண்டே அது அகற்றப்பட்டுள்ளது என்றார்.
இன்று மதியம் தனியார் விடுதியில் கூட்டமைப்பினருக்கும் அண்ணாமலைக்கு இடம்பெற்ற சந்திப்பில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே சிவஞானம் இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர் வைத்தியர் சத்தியலிங்கம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறிதரன் செல்வம் அடைக்கலநாதன் எம். ஏ.சுமந்திரன் ,சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.