
ஐ.நாவில் நல்லிணக்கப் பேச்சு இங்கு தமிழர் மீது அடக்குமுறை
பிணையில் வந்த கஜேந்திரன் விசனம்!
நாட்டின் ஜனாதிபதி ஐ.நா.வில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த போகின்றோம் என்று கூறுகிறார். ஆனால் எங்களுடைய உறவினர்களை, எங்களுக்காகப் போராடியவர்களை நினைவு கூருவதற்கான உரிமையைக்கூட வழங்க அவர் தயாரில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தியாகதீபம் திலீபனின் நினைவிடத்தில் சுடரேற்றுவதற்கு நான் தயாராகும்பொழுது அங்குநின்ற பொலிஸார் தடுத்தார்கள். நீதிமன்றத் தடை உத்தரவு இருக்கின்றதா? என்று அவர்களிடம் கேட்டேன். ஆனால் அவர்கள் நீதிமன்ற தடையுத்தரவைக் காண்பிக்கவில்லை. நீதிமன்ற தடையுத்தரவை நாங்கள் மதிக்கிறோம்.
ஆனால், எங்கள் உரிமையை மீறும் உங்களது செயலை ஏற்கமுடியாதென்று தெரிவித்தேன்.
நினைவிடத்துக்கு உள்ளே செல்ல அனுமதிக்காத நிலையில், நினைவிடத்துக்கு முன்பாக நான் நின்ற இடத்திலேயே சுடரேற்றியபோது அங்கு இருந்த பொலிஸார் மிலேச்சத்தனமாக காட்டுமிராண்டித்தனமாக எங்களுடைய மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக அதனை தட்டி அணைத்தார்கள். அதனை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். நினைவுகூரும் உரிமை எங்கள் எல்லோருக்கும் இருக்கிறது. சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்போம் என்ற போர்வையில் தமிழர்களை அடக்கி ஒடுக்கி சிங்கள பௌத்த மேலாண்மையை நிறுவ இங்கிருந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். எந்தவோர் இடத்திலும் தமிழர்களுடைய உணர்வுகளை மதித்து செயற்பட அவர்கள் தயாராக இல்லை.
தனி ஒருவனாக நான் அந்த இடத்துக்குச் சென்றால்கூட சட்டத்தை மீறினேன் என்று சித்தரிக்கப்படுகின்றது. ஆனால், சிறைச்சாலைக்குள் சென்று கைத்துப்பாக்கியை தலையில் வைத்து கொலை அச்சுறுத்தல் விடுத்தவர் இதுவரை கைதுசெய்யப்படவில்லை. – என்றார்.




