
கட்டுக்கதைகளை விடுத்து பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடுங்கள்! விசேட மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை!
கட்டுக்கதைகளுக்கு இரையாகாமல், பிள்ளைகளுக்குத் தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் பின்வாங்காது செயற்படுங்கள் என்று பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களிடம், விசேட மருத்துவ நிபுணர்கள் கோரிக்கை விடுத்தனர். விசேட மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைகளுக்கமையவே, உலகிலும் எமது நாட்டிலும், தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அதனால், தடுப்பூசி ஏற்றும் விடயத்தில் வீண் அச்சங்கொள்ளத் தேவையில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் வீடியோ தொழில்நுட்பத்தின் ஊடாக நேற்று ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பில், சிறுவர் நோயியல் விசேட மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டு, சிறுவர்களுக்கான தடுப்பூசி ஏற்றல் தொடர்பில் கருத்துரைத்தனர். அதன்போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்த செய்திக் குறிப்பில்,
எதிர்வரும் நாள்களில், நாட்டின் அனைத்து மாகாண, மாவட்ட மற்றும் ஆதார மருத்துவமனைகளிலும், சிறுவர்களுக்கான தடுப்பூசி ஏற்றலுக்குரிய திட்டமிடல்கள், விசேட மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைகளுக்கமைய மேற்கொள்ளப்படவுள்ளன. சிறுவர்களுக்கான தடுப்பூசி ஏற்றலானது, மூன்று படிமுறைகளின் கீழ் மேற்கொள்ளப்படவுள்ளது. அதன்படி, 12 – 19 வயதுக்கிடைப்பட்ட நாள்பட்ட நோய்களுடைய சிறுவர்களுக்கு முதற்கட்டத் தடுப்பூசி ஏற்றல் இடம்பெறும். 15 – 19 வயதுக்கிடைப்பட்ட ஆரோக்கியமான சிறுவர்களுக்கு, அடுத்தகட்டமாகத் தடுப்பூசி ஏற்றப்படும்.
இந்தநடவடிக்கை, வெகு விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. அத்துடன், 12 – 15 வயதுக்கிடைப்பட்ட சிறுவர்களுக்கான தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டம், மூன்றாவது படிமுறையாக, விசேட மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றவுடன் ஆரம்பிக்கப்படவுள்ளது. தடுப்பூசி ஏற்றப்படும் சிறுவர்கள் தொடர்பில், விசேட மருத்துவக் குழுவொன்றால் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, சிறுவர்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் தொடர்பில் அவதானிக்கப்படும். வீடுகளுக்குச் சென்ற பின்னர் ஏதேனும் சிக்கல்கள் ஏற்படுமாயின், அதற்கான ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்வதற்காக, தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்படும் என்று விசேட மருத்துவ நிபுணர் அநுருத்த பாதெனிய தெரிவித்தார்.
தடுப்பூசி ஏற்றல் வேலைத்திட்டத்தை, மருத்துவமனைகளுக்குள் மாத்திரம் முன்னெடுக்கவும் ஃபைஸர் தடுப்பூசியை மாத்திரம் சிறுவர்களுக்கு ஏற்றவும், விசேட மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. வைரஸை விட வேகமாக, கட்டுக்கதைகள் பரவுகின்றன. அவ்வாறான கட்டுக்கதைகள், பெரும் விளைவுகளை ஏற்படுத்தும். சிறுவர்களுக்கான தடுப்பூசி ஏற்றல் என்பது, எமது சமூகத்தில் மிகவும் உணர்ச்சிமயப்பட்ட விடயம், அதனால், மருத்துவர்களைப் போன்றே ஊடகங்களும், மிகவும் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டுமென்று சுட்டிக்காட்டினார்.
இணையவழிக் கல்வியின் ஊடாக, சிறுவர்களின் வெளித்திறன் அபிவிருத்திக்குப் பெரும் பாதிப்பு ஏற்படுகின்றது எனச் சுட்டிக்காட்டிய சிறுவர் நோயியல் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் பேராசிரியர் பூஜித்த விக்கிரமசிங்க, பாடசாலைக் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டாலும், அறிவாற்றல் குறைந்த பிள்ளைகளைப் பாடசாலைகளுக்கு அனுப்புவது குறித்து பெற்றோர் அச்சம் கொண்டுள்ளனர். இதனால், கல்வியைப் பெறுவதற்கு உள்ள சம உரிமை, அந்தச்சிறுவர்களுக்குக் கிடைக்காமல் போகும். அவ்வாறான நிலைமையை, தடுப்பூசி ஏற்றலின் ஊடாகத் தவிர்த்துக்கொள்ள முடியுமென்றும் கூறினார். – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.