வாழ்கைச் செலவு அதிகரிக்காத வகையில் நியாயமான விலையில் மக்களுக்கு பொருட்கள் கிடைப்பதை உறுதிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மெய்நிகர் வழியூடாக வாழ்க்கைச் செலவு குழு கூட்டம் இன்று இடம்பெற்றது.
இதன்போது, அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
இக்கலந்துரையாடலின் போது, பால்மா, சமையல் எரிவாயு, அரிசி, சீமெந்து மற்றும் கோதுமை மா ஆகிய பொருட்களுக்கு சந்தையில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நிவர்த்திப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
எனினும், குறித்த பரிந்துரைகளை எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் முன்வைத்து அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெற தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
மேலும், இக் கலந்துரையாடலில் நிதி அமைச்சர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வாழ்க்கைச் செலவுடன் தொடர்புபட்ட துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
