சுற்றாடல் அமைச்சுடன் தொடர்புபட்ட திருகோணமலை மாவட்டத்திற்கு உரித்தான பிரச்சனைகள் மற்றும் உரிய விடயங்கள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் இன்று(24) சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
அமைச்சரின் வருகையை முன்னிட்டு திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் இதன்போது மரக்கன்றுகளும் அமைச்சரால் நடப்பட்டது.
ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அனைத்து வகையான அபிவிருத்திச் செயற்பாடுகளையும் சுற்றாடல் நேயமிக்க செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொண்டு வருகின்றது. திருமலை மாவட்டத்தில் இயற்கை வளம் அதிகமாக காணப்படுகின்றது.
எனவே குறித்த இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் பொறுப்புடையதாக காணப்படுகின்றது. குறிப்பாக இயற்கை வளங்களுடன் தொடர்புடைய நிறுவனங்கள் அனைத்தும் இணைந்து செயற்பட வேண்டும்.
மக்கள் தங்களுடைய வாழ்வாதார செயற்பாடுகளை மேற்கொள்ளும் போது சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்படுவது மிக முக்கியமானதாகும். நிலைத்து நிற்கக்கூடிய அபிவிருத்தி நோக்கின் அடிப்படையில் அனைத்து விதமான செயற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் இருப்பதாக இதன்போது அமைச்சர் அவர்கள் தெரிவித்தார். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மணல் அகழ்வு மற்றும் ஏனைய சுற்றாடல் சார்ந்த பல பிரச்சினைகள் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள மணல் அகழ்வு பத்திரங்களில் கூடிய பட்சத்தை மாவட்ட மக்களுக்கு வழங்க வேண்டிய தேவை காணப்படுகின்றது.
மணல் அனுமதி பத்திரங்களை கூட்டுறவு முறையில் வழங்குகின்ற சந்தர்ப்பத்தில் அதன் மூலமாக மக்களுடைய வருமானத்தை அதிகரித்து வாழ்வாதாரத்தை மேம்படுத்த கூடியதாக அமையும்.பயன்படுத்திய காபன் பேனைகள் மற்றும் பாவனையில் இருந்து நீக்கப்பட்ட பற்தூரிகைகளை சேகரித்து அவற்றை மீற்சுழற்சிப்படுத்தும் நோக்கில் 270 குப்பைத்தொட்டிகள் திருகோணமலை மாவட்டத்திற்கு வழங்கப்பட உள்ளது.
இதற்கு இணைவாக அமைச்சரினால் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ்ஜிடம் ஒருசில குப்பைத்தொட்டிகள் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது .அரச நிதிக்கு புறம்பாக மக்களுடைய ஒத்துழைப்பு மூலம் இந்த வேலைத் திட்டம் நாடு முழுவதும் சுற்றாடல் அமைச்சரின் எண்ணக்கருவுக்கமைய நடைமுறைப்படுதப்பட்டு வருகின்றது.
இந்நிகழ்வில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் ஆகிய கபில நுவன் அத்துகோரல, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விஷேட வைத்திய நிபுணர் அணில் ஜாசிங்க, பிரதேச அரசியல் தலைமைகள், அரச உயர் அதிகாரிகள் மற்றும் மணல் அகழ்வு சங்க பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.