மன்னாரில் எதிர்வரும் 26ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் தீலிபனின் நினைவேந்தல் நிகழ்வு ஒன்றை மேற்கொள்ள இருப்பதாக கூறி மன்னார் பொலிசார் தடை உத்தரவை பிறப்பிக்கக் கோரி மன்னார் நீதிமன்றத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை வழக்குத் தாக்கல் செய்தனர்.
தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ் சிவகரன் என்பவரே குறித்த நினைவேந்தலை மேற்கொள்ள உள்ளதாக கூறி வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், சிவகரன் என்பவரை இன்றையதினம் மதியம் 1.30 மணியளவில் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பானை விடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது, தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ் சிவகரன் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலையானார். சிவகரன் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.சிராய்வா மற்றும் சட்டத்தரணி அன்ரனி றொமோசன் ஆகியோர் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.
மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணிகள் தமது சமர்ப்பணத்தை முன்வைத்தனர்.
மன்னார் பொலிசார் தாக்கல் செய்தது போல் மக்களை ஒன்று சேர்த்து நினைவேந்தலை நடத்த எவ்வித ஏற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை எனவும், பொலிசார் பொய்யான வழக்கை மன்றில் தாக்கல் செய்துள்ளனர் என சமர்ப்பணத்தை முன் வைத்துள்ளார்.
மேலும் புலனாய்வுத் துறையினரின் தகவலுக்கு அமைவாக என்ன சான்றுடன் குறித்த வழக்கை பொலிசார் மன்றில் தாக்கல் செய்துள்ளனர் எனவும், பொலிசார் மன்றில் தெரிவித்தது போல் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி மக்களை ஒன்று கூட்ட முயற்சிகளும் இடம்பெறவில்லை எனவும், எனவே பொலிசாரின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என சட்டத்தரணிகள் மன்றில் தெரிவித்தனர்.
இதன்போது, விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதிவான் கட்டளை பிறப்பித்தார்.
பொலிசாரின் வேண்டுகையை ஏற்க மறுத்த நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என கூறியதுடன் எதிர்வரும் முதலாம் திகதி வழக்கை ஒத்தி வைத்தார்.