வெண்கரம் அமைப்பின் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டின் முன்னோக்கிய பாய்ச்சலாக யாழ்ப்பாணம் கொட்டடியில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல், ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அட்சய திருதியை தினமான இன்று (03) செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.30 மணிக்கு வெண்கரம் பிரதான செயற்பாட்டாளர் மு.கோமகன் தலைமையில் இந்த ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.
கொட்டடி லைடன் சந்தியில் உள்ள கட்டிடம் ஒன்றில் மிக எளிமையான முறையில் ஆரம்ப வைபவம் இடம்பெற்றது.
வலிகாமம் கல்வி வலய தமிழ் பாட ஆசிரிய ஆலோசகரும் வெண்கரம் தலைமைச் செயற்பாட்டாளர்களில் ஒருவருமாகிய சுகுணா சண்முகேந்திரன் மற்றும் விருந்தினர்கள் இணைந்து இக்கற்கைநெறிக் கூடத்தை திறந்து வைத்தனர்.
பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள மாணவர்களை கல்வியில் மேல்நிலை அடையச் செய்வதன் மூலம் அவர்களின் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு செயற்பட்டுவரும் வெண்கரம் அமைப்பு, இன்று தகவல் தொழில்நுட்பத் துறையுடன் இரண்டாம் மொழியை விருத்தி செய்யும் செயற்பாட்டை நோக்கி வளர்ந்துள்ளமையை பலரும் பாராட்டியுள்ளனர்.


