123 கோடி ரூபா பெறுமதியான பொருட்களை தமிழகம் வழங்கியுள்ள அதேவேளை, தினமும் பலமில்லியன் ரூபா பெறுமதியான வடபகுதி கடல்வளம் தமிழக மீனவர்களால் கொள்ளை போகின்றது எனவும், கைச்சாத்திடப்பட்ட இலங்கை இந்தியா ஒப்பந்தங்கள் என்ன ஆகுமோ என்ற பீதியில் இந்தியா உள்ளது. ஆகவே மகிந்த அரசைக் காப்பாற்ற வேண்டிய தேவை இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது என்றும் பேராசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழகம் சார்பில் 123 கோடி ரூபா பெறுமதியான உணவுப்பொருட்களை மனிதாபிமான அடிப்படையில் இலங்கைக்கு வழங்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
இன்றைய சூழலில் இலங்கை வாழ் தமிழர்களுக்கு உதவும்படி விடுத்த கோரிக்கை தமிழர்களுக்கு மட்டுமல்ல முழு இலங்கை மக்களுக்கும் அவை வழங்கப்பட வேண்டும் என கோரப்பட்டதற்கிணங்க, முழு இலங்கைக்கும் இவ் உதவி வழங்கப்படுகிறது. இதனால் பலரும் முதல்வரை பாராட்டி வருகின்றனர்.
இக்கட்டான தருணத்தில் செய்யப்படுகின்ற இவ்வாறான பணிகள் செயற்பாடுகள் பாராட்டப்பட வேண்டிய ஒன்று என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஈழத்தமிழர் சார்பில் அவரை வாழ்த்துகின்றோம்.
அதேவேளை மனிதாபிமான அடிப்படையில் உதவ வேண்டுமென வடபகுதியிலுள்ள இரண்டு லட்சத்துக்கும் அதிகமான மீனவர்கள் சார்பில் விடுத்த வேண்டுகோள் இதுவரை தமிழக அரசால் நிறைவேற்றப்படவில்லை என்பதையும் முதல்வருக்கு நினைவூட்ட விரும்புகின்றோம்.
அதுவும் தமிழக மீனவர்களினால் மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்ற வடபகுதி மீனவர்களே இந்த வேண்டுகோளை முன்பு விடுத்திருந்தனர். இதுவல்ல சந்தர்ப்பம் என சிலர் வாதிடலாம். ஆனாலும் இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடையாது என்றும் பார்க்கலாமே. பசி பட்டினி எல்லாம் ஒன்றுதான்.
யுத்தகாலத்திலும் அதன் பின்னரும் ஈழத்தமிழ் மக்கள் பல உயிர்களை காவு கொடுத்து மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தனர். யுத்தத்தின் பின்னரும்ன வடபகுதி மீனவர்கள் பல வழிகளிலும் அரசினாலும், (கப்பம், ஊழல், ராணுவ கெடுபிடி ) இதற்கப்பால் தமிழக மீனவர்களின் அத்து மீறிய செயற்பாட்டினாலும் பாதிப்படைந்தே வந்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் அத்துமீறி நுழைந்து வளங்களைச் சூறையாடிச்செல்வதை நிறுத்தி சுதந்திரமாக மீன்பிடி தொழிலை மேற்கொள்ள ஆவன செய்யப்பட வேண்டும் என்ற பல நாட் கோரிக்கை தமிழக அரசால் இதுவரை புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளது. இக்கோரிக்கை நிறைவு செய்யப்பட வேண்டும். என முதல்வருக்கு வடபகுதி மீனவர்சங்க சார்பில் மகஜர்களும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. ஆயினும் பதில் எவையும் இதுவரை இல்லை.
123 கோடி ரூபா பெறுமதியான பொருட்களை தமிழகம் வழங்கியுள்ள அதேவேளை, தினமும் பலமில்லியன் ரூபா பெறுமதியான வடபகுதி கடல்வளம் தமிழக மீனவர்களால் கொள்ளை போவதையும் நினைவூட்ட விரும்புகின்றோம். வருடாந்தம் சுமார் 8,500 மில்லியன் ரூபா பெறுமதியா கடலுணவுகள் தமிழ் நாட்டு மீனவர்களால் இப்பகுதிக்குரிய வளம் சுரண்டப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இன்று தமிழக அரசு செய்யும் உதவி “வழித்தேங்காயை எடுத்து தெருப்பிள்ளையாருக்கு அடித்த” கதையாகவே பார்க்க வேண்டியுள்ளது.
தமிழகம் இன்று செய்துள்ள உதவி தமிழர்களுக்கு எப்படி வந்து சேருமோ என்பதையும் யாம் அறியோம், பா.ஜ.க தமிழக தலைவர் அண்ணாமலை முன் பின் அறியாத ஒருவர்.
திடீரென இலங்கை வந்து யாழ்ப்பாணம் உட்பட பல இடங்களுக்கும் விஜயம் செய்துள்ளதுடன், புலிகள் பற்றிய விமர்சனங்கள் உட்பட 13வது திருத்தம் பற்றியும் கதை அளந்திருக்கின்றார்.
அவருக்கு ஏன் இந்த வேலை. பா.ஜ.க தமிழக தலைவரின் விஜயமானது நாடிபிடித்து பார்க்கும் வேலை என்பதும், தமிழகத்தின் உதவி இந்திய அரசின் நிகழ்ச்சித் திட்டத்தின் ஒருபகுதி என்பதும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
எல்லாம் மகிந்த அரசைக் காப்பாற்ற எடுக்கும் செயற்பாடுகள் போலவே தெரிகிறது. அண்மையில் கைச்சாத்திடப்பட்ட இலங்கை இந்தியா ஒப்பந்தங்கள் என்ன ஆகுமோ என்ற பீதியில் இந்தியா உள்ளது போல்படுகிறது.
இலங்கையில் கால்பதிக்க இந்த ஒப்பந்தங்கள் அவசியம். ஆகவே மகிந்த அரசைக் காப்பாற்ற வேண்டிய தேவை இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது.
நாட்டின் எதிர்காலம், ஈழத்தமிழர் எதிர்காலம், இவைபற்றி இந்தியாவுக்கு எந்தக் கவலையுமில்லை. தென்பகுதியினர் ஒட்டுமொத்தமாக ராஜபக்க்ஷ வம்சத்தை கூண்டோடு காலிசெய்யும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இவ்வாறான பின்னணியில் மகிந்த அரசைக் காப்பாற்ற எத்தனிக்கும் எந்த தரப்பும் நிச்சயமாக தென்பகுதி மக்களின் எதிர்ப்புக்கு ஆளாகலாம். ஆட்சி மாறின் இந்தியா ஒப்பந்தங்கள் கேள்விக்குறிதான்.
எவ்வாறாயினும் இந்த அரசைக் காப்பாற்ற எடுக்கும் தந்திரோபாயங்கள் வெற்றி பெறப்போவதில்லை. தமிழக அரசின் இதே மனிதாபிமானம் தமிழக மீனவர் அத்து மீறலை தடுத்து வட பகுதி மீனவர்களை காப்பாற்றும் விஷயத்திலும் காட்டப்பட வேண்டும் என்பதே எமது அவா. செய்வாரா? – என கேள்வி எழுப்பியுள்ளார்.