இலங்கை பெண் அகதி வீட்டிற்குள் இரவில் நுழைந்த பொலிஸை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவிட்டார்.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் தனுஸ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்கு பைப்பர் படகில் அகதியாக வந்த இலங்கை தமிழர்கள் 80 பேர், பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பின் மண்டபம் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இலங்கையில் இருந்து மார்ச் 22 ஆம்திகதி மர்மப் படகில் வந்த ஒரு இளம்பெண் உள்பட 6 பேர் தனுஷ்கோடி வந்தனர். மெரைன் பொலிஸாரின் விசாரணைக்கு பின், மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.
கணவரை பிரிந்த அப்பெண் குழந்தைகளுடன் தங்கியுள்ளார். அப்பெண்ணிடம் பழகி வந்த மண்டபம் மெரைன் பொலிஸ் அன்பு, கடந்த 2 நாட்களுக்கு முன் நள்ளிரவு மது போதையில் வீட்டிற்குள் புகுந்து அப்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றார். அப்பெண் மறுத்ததையடுத்து, அன்பு அங்கிருந்து தப்பி சென்றார்.
இது குறித்து அப்பெண் மற்றும் அப்போது முகாமில் பாதுகாப்பு பணியில் இருந்த பொலிஸ் அளித்த புகாரின் அடிப்படையில் அன்புவிடம், மெரைன் ஏடிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் பொலிஸார் விசாரித்தனர்.
விசாரணை அறிக்கைபடி மாவட்ட பொலிஸ் நிலையத்திற் பணியிட மாற்றம் செய்யப்பட்ட அன்புவை, தற்காலிக பணியிடை மாற்றம் செய்து, ராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவிட்டார்.
இச் சம்பவம் மண்டபம் அகதிகள் முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.