களுவன்கேணி கடற்கரையோரப் பகுதியில் காணப்படும் பெறுமதியான மரங்கள், கண்டல் தாவரங்கள் எரியூட்டப்பட்டன!

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுவன்கேணி கடற்கரையோரப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் காடுகள் அழிக்கப்பட்டு அங்கு காணப்படும் பழமையான பெறுமதியான மரங்கள், கண்டல் தாவரங்கள் என்பன எரியூட்டப்பட்டு கட்டிடங்கள் அமைக்கும் வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சிலர் இணைந்து குறித்த காடழிப்பு நடவடிக்கை மற்றும் அனுமதி இல்லாமல் கட்டடங்களை அமைப்பது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபையின் உறுப்பினர் வனேந்திரன் சுரேந்திரன் மற்றும் பிரதேச இளைஞர்கள் ஒன்றிணைந்து  இந்த விடயம் தொடர்பாக பார்வையிட  குறித்த பகுதிக்கு சென்றுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் அங்கு இடம்பெறும் செயற்பாடுகளை அவதானித்து இவர்கள் அரசியல்வாதிகள் உயர் மட்ட அரச அதிகாரிகள் போன்றவர்களை தொடர்புகொண்டு வினவியபோது இது தொடர்பாக யாருக்கும் தெரியாது எனவும் குறித்த இடத்தில் சட்டவிரோதமான முறையில் இச்செயற்பாடு இடம்பெறுவதாகவும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை குறித்த இடத்தில் பயங்கரவாத செயற்பாட்டிற்காக குறித்த வேலைத்திட்டம் இடம்பெறுவதாக பிரதேச சபை உறுப்பினர்  சுரேந்திரன் சுட்டிக்காட்டியதோடு வேலைத் திட்டங்களை உடன் நிறுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் கோரிக்கை விடுத்தார்.

சம்பவ இடத்திற்கு உடன் வருகை தந்த களுவன்கேணி பிரதேசத்தின் கிராம சேவையாளர் குறித்த சட்டவிரோத வேலைத்திட்டங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும் கட்டடம் அமைத்து கொண்டிருப்பவர்களை உடனடியாக கட்டட வேலைகளை நிறுத்தி அங்கிருந்து  உடனடியாக செல்லுமாறு பணித்துடன் அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றினார்.

தொடர்ச்சியாக குறித்த பகுதிகளில் போலி ஆவணங்களை தயாரித்து இவ்வாறான சட்ட விரோத செயற்பாடுகள் இடம்பெறுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *