கற்பிட்டி பிரதான வீதியின் தளுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில், கற்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் உயிரிழந்துள்ளார்.
புத்தளம், பாலாவி – கற்பிட்டி பிரதான வீதியின் தளுவ பகுதியில் திங்கட்கிழமை (02) இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த கற்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் முஹம்மட் அக்மல் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.
மேலும் தெரியவருகையில்,
சம்பவம் இடம்பெற்ற திங்கட்கிழமை இரவு குறித்த பிரதேச சபை உறுப்பினர் பயணித்த மோட்டார் சைக்கிள், துவிச்சக்கர வண்டியொன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் படுகாயமடைந்த பிரதேச சபை உறுப்பினரை அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
அதன் பின்னர், அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக அன்றிரவே கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இவ்வாறு கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரதேச சபை உறுப்பினர் மீண்டும் புத்தளம் தள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு, அவர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த இவர், நேற்று புதன்கிழமை (03) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் நுரைச்சோலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மர்ஹூம் முஹம்மட் அக்மல் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கற்பிட்டி சின்னக்குடியிருப்பு வட்டாரத்தில் போட்டியிட்டு பிரதேச சபைக்கு தெரிவானார்.
அத்துடன், கடந்த பாராளுமன்ற பொதுத் தேர்தலில் தராசுக் கூட்டணியில் போட்டியிட்டார்.
இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேச சபையின் உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட இவர் , பொதுக் கூட்டணியில் இணைந்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டது மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு தெரிவித்தமை உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இவரது பிரதேச சபை உறுப்பினர் பதவி கடந்த சில மாதங்களுக்கு முன் ஐக்கிய தேசியக் கட்சியால் பறிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.