பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த விலகப் போவதில்லை

கொழும்பு, மே 04

பிரதமர் பதவியில் இருந்து தான் விலகப் போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாக ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நிறைவடைந்த ஆளும் கட்சிக் குழுக்களின் கூட்டத்தைத் தொடர்ந்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து பதவி விலகல் தொடர்பான தமது நோக்கத்தை நாடாளுமன்றத்தில் அறிவிப்பாரென முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

எவ்வாறாயினும், அந்த அறிவிப்பினூடாக, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கும் குழுவிற்கு இடமளிக்கும் வகையில், தான் பதவி விலகத் தயார் என பிரதமர் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கவிருந்தார்.

அவர் பிரதமர் பதவியில் இருந்து விலகி, அரசியலமைப்பையும், நாடாளுமன்றத்தையும் நாட்டையும் அராஜகமாக்கத் தயாரில்லை என அறிவிக்கப் போவதாகவும் செய்திகள் வெளியாகின.

எவ்வாறாயினும், பிரதமர், அரசாங்கம் மற்றும் ஜனாதிபதிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நேற்று மாலை சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையால் இந்த விசேட அறிக்கையின் திட்டம் மாறியுள்ளதாக பின்னர் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு பதவி விலக தயாரில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்றைய ஆளும் கட்சிக் குழுக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *