
மூதூர் பொலிஸ் பிரிவில் உள்ள இரால்குழி பாலத்திலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவிலுள்ள கடற்கரையோரத்தில் உயிரிழந்த நிலையில் மிதந்து கொண்டிருந்த மீனவர் ஒருவரின் சடலமொன்று நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் மூதூர் – இரால்குழி பகுதியைச் சேர்ந்த சூசப்பிள்ளை ஜெயராம் (வயது-25) என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கடலுக்கு மீன்பிடிப்பதற்காக கடந்த திங்கட்கிழமை மாலை சென்ற குறித்த இளைஞன் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்ப உறவினர்கள் மூதூர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
இந்த நிலையில் கடலுக்குச் சென்றோர் சடலமொன்று மிதந்து கொண்டிருப்பதைக் கண்டு பொலிஸாருக்கும், கிராம மக்களுக்கும் அறிவித்ததை அடுத்து காணாமல் போன இளைஞனின் சடலமென கண்டறியப்பட்டது.
குறித்த சடலமானது உருக்குலைந்த நிலையில் காணப்படுவதோடு இளைஞன் கொலை செய்யப்பட்டானா? அல்லது இயற்கை சாவா? என்பது இதுவரை கண்டறியப்படாத நிலையில் மூதூர் பொலாஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.