கொழும்பிலுள்ள நிரந்தர வீதித்தடைகளை அகற்றக்கோரி மனு தாக்கல்!

கொழும்பில் உள்ள நிரந்தர வீதித் தடைகளை அகற்றுமாறு பொலிஸ் மா அதிபருக்கும் ஏனைய அதிகாரிகளுக்கும் உத்தரவிடுமாறு கோரி சுற்றாடல் நீதிக்கான மத்திய நிலையம் உயர் நீதிமன்றில் இன்று (05) அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.

15/3, வஜிர வீதி, கம்பஹா பகுதியைச் சேர்ந்த ஷெனால் ஜயசேகர மற்றும் சுற்றாடல் ஆர்வலர் ரஞ்சித் சிசிர குமார ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், பிரதிவாதிகளாக பொலிஸ்மா அதிபர், கோட்டை மற்றும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், வீதி அபிவிருத்தி அதிகார சபை, மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சட்டமா அதிபர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

கொழும்பு – கொள்ளுப்பிட்டி கோட்டைப் பகுதி மற்றும் அலரிமாளிகையை அண்மித்த பகுதிகளில் காவற்துறையினரால் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர வீதித் தடைகளினால் பொதுமக்களின் நடமாடும் சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

கடந்த 23ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதவான் பிறப்பித்த உத்தரவுக்கு அமையவே இந்த வீதித் தடுப்புகள் அமைக்கப்படுவதற்கான காரணம் என நம்புவதாகவும், அந்த உத்தரவுக்கு அமைய 16 பேருக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக மனுதாரர்கள் தமது மனுக்களில் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்படி, குறித்த மனுக்களை விசாரணைக்கு உட்படுத்துமாறும், இந்த நிரந்தர வீதித் தடைகளை பயன்படுத்துவதன் மூலம் தங்களுக்கும் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் அறிவிக்குமாறும், அந்த வீதித் தடைகளை அகற்றுமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடுமாறும் மனுதாரர்கள் நீதிமன்றில் கோரியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *