
நாடும் நாட்டு மக்களும் அசாதாரண சூழ்நிலைகளுக்கு முகம் கொடுத்து வரும் நிலையில் கட்சி ரீதியில் தனிப்பட்ட அரசியல் ரீதியான சேறு பூசுதல் மற்றும் தேவையற்ற விமர்சனங்களை தவிர்த்துக் கொள்ளுமாறு தொழிலாளர் தேசிய சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் அறிவுரை வழங்கியுள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சமூக வலைத்தளங்கள் மற்றும் முகநூல் ஊடகங்களில் தனிப்பட்ட கட்சி ரீதியான விமர்சனங்களும் தேவையற்ற கருத்து முரண்பாடுகளையும் அதிக அளவில் காண முடிவதாகவும் இது ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவகுக்காது எனவும் பழனி திகாம்பரம் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதனால் நாம் ஆட்சியில் இருந்தபோது மக்களுக்கு செய்த அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பிலும் பெற்றுக்கொடுத்த அரசியல் உரிமைகள் தொடர்பிலும் முடிந்த அளவு மக்களை தெளிவுபடுத்துமாறு அவர் கட்சி உறுப்பினர்களுக்கு பணித்துள்ளார்.
சில கட்சிகளும் அதன் உறுப்பினர்களும் சேறு பூசும் வகையில் அவதூறான கருத்துக்களை விமர்சனங்களை முன்வைக்கின்ற போது அதற்கு அநாவசிய பதில்களை வழங்கி நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனவும் மக்களுக்கு பயன் தரக்கூடிய கலந்துரையாடல்கள் செயற்பாடுகளில் ஈடுபடுமாறும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் அதன் தலைவர் பழனி திகாம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.